மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்துக்காக, மேட்டூர் அணையிலிருந்து முதல்வர் ஸ்டாலின் நேற்று தண்ணீரை திறந்து வைத்தார்.
டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். நடப்பாண்டு அணையில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளதால், அணையிலிருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதன்படி, மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை 9.45 மணியளவில் டெல்டா பாசனத்துக்கு மு.க.ஸ்டாலின் தண்ணீரை திறந்துவைத்து, அணையிலிருந்து சீறிப்பாய்ந்து வெளியேறிய நீரில் மலர்களைத் தூவினார். தொடர்ந்து, டெல்டா மாவட்டங்களின் திட்டப் பணிகள் மற்றும் சிறப்பு தூர்வாரும் பணிகள் குறித்த புகைப்படக் கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார்.
மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மூலம் நாமக்கல், கரூர், திருச்சி,புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் ஏறத்தாழ 17.32 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். குறுவை பாசனத்துக்கு ஜூன் 12 முதல் செப்டம்பர் 15-ம் தேதி வரையும், சம்பா மற்றும் தாளடி பாசனத்துக்கு செப்.15 முதல் ஜனவரி 28-ம் தேதி வரையிலும் தண்ணீர் விடப்படும்.
நடப்பாண்டில் டெல்டா விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நிலைமைகேற்ப தண்ணீரை முறைவைத்துப் பயன்படுத்தி, அதிக அளவு மகசூல் பெற்றுப் பயனடையுமாறு முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ராஜேந்திரன், சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மதிவேந்தன், எம்.பி-க்கள் டி.எம்.செல்வகணபதி, மணி, மலையரசன்,எம்எல்ஏ சதாசிவம், மாவட்டஆட்சியர் பிருந்தா தேவி, நீர்வளத்துறைச் செயலர் ஜெயகாந்தன் மற்றும் அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேட்டூர் அணையில் நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 6,339 கனஅடியாகவும், நீர்மட்டம் 114.91 அடியாகவும், நீர் இருப்பு 85.58 டிஎம்சியாகவும் இருந்தது. பாசனத்துக்கு தொடக்கத்தில் விநாடிக்கு 3,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இது படிப்படியாக 10,000 கனஅடி வரை அதிகரிக்கப்பட்டது. அணையில் இருந்து முழு அளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் சுரங்க மின் நிலையம், அணை மின் நிலையம் மற்றும் 7 கதவணைகள் மூலம் 460 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.