கோவை,
9-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர். கல்லூரி மைதானத்தில நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்நிலையில், இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் 8வது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் – சீகம் மதுரை பாந்தர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற மதுரை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
தொடர்ந்து கோவை அணியின் தொடக்க வீரர்களாக ஜிதேந்திர குமார் மற்றும் சுரேஷ் லோகேஷ்வர் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ஜிதேந்திர குமார் 17 ரன்னிலும், சுரேஷ் லோகேஷ்வர் 20 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் புகுந்த ஷாரூக் கான் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதில் சச்சின் 15 ரன், ஆண்ட்ரே சித்தார்த் 20 ரன், மாதவ பிரசாத் 4 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
இதையடுத்து ஷாரூக் கான் உடன் பிரதீப் விஷால் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். நிலைத்து நின்று ஆடிய ஷாரூக் கான் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் கோவை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 169 ரன்கள் எடுத்தது.
கோவை கிங்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ஷாரூக் கான் 77 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி ஆட உள்ளது.