அகமதாபாத் விமான விபத்துக்கு ரூ.2,400 கோடி காப்பீடு தொகை கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து காப்பீட்டு துறை நிபுணர்கள் கூறியதாவது: கடந்த வியாழக்கிழமை குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 241 பேர் உயிரிழந்தனர்.
ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் நியூ இண்டியா அஷ்யூரன்ஸ் மற்றும் டாடா ஏஐஜி நிறுவனங்களில் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது. விமானத்தின் வயது, தரத்தின் அடிப்படையில் காப்பீடு தொகை வழங்கப்படும். இதன்படி ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.2,400 கோடி வரை காப்பீடு தொகை கிடைக்கும்.
மாண்ட்ரியால் மாநாட்டில் வரையறுக்கப்பட்ட விதிகளின்படி விமான விபத்தில் உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு இழ்பபீடு வழங்கப்படும். பெரும்பாலும் விமானத்துக்கான காப்பீடு தொகை உடனடியாக வழங்கப்பட்டுவிடும். எனினும் விமான பயணிகளுக்கான காப்பீடு தொகை கிடைக்க காலதாமதம் ஏற்படலாம். சில விமான விபத்துக்களில் 3 ஆண்டுகள் வரை காலதாமதம் ஏற்பட்டு இருக்கிறது.
அகமதாபாத் விமான விபத்து விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நேரடியாக கவனம் செலுத்தி வருவதால் உயிரிழந்த பயணிகளுக்கான காப்பீடு உடனடியாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனினும் பயணிகளின் உண்மையான வாரிசு யார் என்பது அடையாளம் காணப்பட்ட பிறகே இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.
மாண்ட்ரியால் மாநாடு விதிகளின்படி விமான விபத்தில் உயிரிழந்த பயணியின் குடும்பத்துக்கு குறைந்தபட்சம் ரூ.1.26 கோடி இழ்பபீடு வழங்க வேண்டும். சில வகை கிரெடிட், டெபிட் அட்டைகளை பயன்படுத்தி விமான டிக்கெட் வாங்குவோருக்கு காப்பீடு வசதி செய்யப்படுகிறது. அத்தகைய பயணிகளுக்கு ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி வரை கூடுதல் காப்பீடு தொகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு காப்பீட்டு துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.