குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. வியாழக்கிழமை ஏற்பட்ட இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் சென்ற 241 பேர் உயிரிழந்தனர். தரையில் விழுந்த விமானம், மருத்துவ கல்லூரி விடுதியில் மோதியதில், மருத்துவ மாணவர்கள் 10 பேரும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தியாவில் இதற்கு முன்பு நிகழ்ந்த 10 மோசமான விமான விபத்துகளின் விவரம்…
* 1978-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி மும்பையிலிருந்து 213 பேருடன் புறப்பட்ட போயிங் 747 விமானம் அரபிக் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 213 பேர் உயிரிழந்தனர்.
* 1982-ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி மும்பை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகியதில் 17 பேர் உயிரிழந்தனர்.
* 1988-ம் ஆண்டு அக்டோபர் 19-ம் தேதி அகமதாபாத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 133 பேர் உயிரிழந்தனர்.
* 1990-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ320 ரக விமானம் பெங்களூரில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் உயிரிழந்தனர்.
* 1991-ம் ஆண்டு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் இம்பால் அருகே விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 69 பேர் உயிரிழந்தனர்.
* 1993-ம் ஆண்டு ஏப்ரல் 26-ம் தேதி அவுரங்காபாத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 737 விமானம், மேல் எழும்பியவுடன் லாரி மற்றும் மின்சார கம்பியில் மோதி விபத்துக்குள்ளானதில் 55 பேர் உயிரிழந்தனர்.
* 1996-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் விமானமும், கஜகஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஐஎல்-76 விமானமும் டெல்லி அருகே நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் இரு விமானங்களிலும் பயணித்த 349 பேர் உயிரிழந்தனர்.
* கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் போயிங் 737 விமானம், பாட்னாவில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது. இதில் 60 பேர் உயிரிழந்தனர்.
* 2010-ம் ஆண்டு மே 22-ம் தேதி ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மங்களூரில் தரையிறங்கும் போது ஓடுபாதையை தாண்டி பள்ளத்தில் விழுந்ததில் 158 பேர் உயிரிழந்தனர்.
* 2020 ஆகஸ்ட் 7-ம் தேதி துபாயில் இருந்து கோழிக்கோட்டில் தரையிறங்கிய ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையை விட்டு விலகி சென்று விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்தனர்.