ஈரான் நாட்டின் அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் மீண்டும் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.
முன்னதாக வெள்ளிக்கிழமை ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது இஸ்ரேல். இதில் தெஹ்ரான் நகரில் உள்ள குடியிருப்புகள் உட்பட பல்வேறு கட்டிடங்கள் சிதிலமடைந்தன. இந்த தாக்குதலை அடுத்து ஈரான் வான்வெளி மூடப்பட்டது. இதை ஈரான் நாட்டின் அரசு ஊடக நிறுவனமான ஐஆர்என்ஏ உறுதி செய்தது. மேலும் அந்நாட்டின் ராணுவ தளங்கள் மற்றும் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது.
இந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் ஈரான் கட்டமைப்புகள் மீது புதிய வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. மேற்கு தெஹ்ரான் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஃபோர்டோ அணு உலைக்கு அருகே இரண்டு வெடிச்சத்தங்கள் கேட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஃபோர்டோ தெஹ்ரானுக்கு தெற்கேயும், மத்திய நகரமான கோமிலிருந்து சுமார் 32 கிமீ வடகிழக்கிலும் அமைந்துள்ளது.
ஜெருசலேமின் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை அமைப்பு சில மணி நேரத்துக்கு முன்பு செயல்படுத்தப்பட்டதாகவும், ஆனால் அது பின்னர் நிறுத்தப்பட்டதாகவும் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏமனில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஒரு ராக்கெட் ஏவப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்தது.
இஸ்ரேலில் வசிப்பவர்கள் பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு அருகில் இருக்கவும், திறந்தவெளிகளில் நடமாடுவதை தவிர்க்கவும் குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.