புதுடெல்லி,
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. இதில், விமானத்தில் சென்றவர்களில் பயணி ஒருவரை தவிர மற்ற பயணிகள், ஊழியர்கள் என 241 பேரும் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்த பயணிகளில், குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானியும் ஒருவர் ஆவார்.
இந்தநிலையில், ஆமதாபாத் சென்ற மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, விமான விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். பிறகு விபத்தில் உயிர் தப்பியவரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், காயமடைந்தவர்களையும் சந்தித்தார்.
இதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விபத்து நடந்த 10 நிமிடத்தில் என்னிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உயிர் பிழைத்தவரை சந்தித்தேன். உயிரிழந்த வெளிநாட்டினரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவம் அறிந்து ஒட்டு மொத்த தேசமும் அதிர்ச்சியில் உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு துணை நிற்போம்.
குஜராத் முதல்-மந்திரி, சிவில் விமானப் போக்குவரத்து மந்திரியை நான் தொடர்பு கொண்டேன். பிரதமரும் சிறிது நேரத்திலேயே என்னை அழைத்தார். அனைத்து மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளும் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றன. 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் இருந்தனர்.
ஒவ்வொரு துறையும் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. விமானம் கிட்டத்தட்ட 1,25,000 லிட்டர் எரிபொருளை நிரப்பி சென்றுள்ளது.டி.என்.ஏ. மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, உடல்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது.பிறகே பலி எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படும்.ஏர் இந்தியா விமான விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.