அகமதாபாத்: அகமதாபாத் நகரில் இருந்து லண்டனுக்கு இன்று புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். பயணி ஒருவர் உயிர் பிழைத்ததை அகமதாபாத் போலீஸ் கமிஷனர் ஜி.எஸ்.மாலிக் உறுதி செய்துள்ளார்.
“11ஏ இருக்கையில் பயணித்த பயணி ஒருவரை போலீஸார் உயிரோடு இருப்பதை அடையாளம் கண்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. குடியிருப்பு பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்” என அவர் தெரிவித்தார்.
11ஏ இருக்கையில் பயணித்த பயணியின் பெயர் ரமேஷ் விஷ்வகுமார் என தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு வயது 38 என்ற தகவலும் வெளியாகி உள்ளது. குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 200-க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.
நடந்தது என்ன?- விபத்தில் சிக்கிய இந்த விமானம் அகமதாபாத்திலிருந்து இன்று (ஜூன் 12) மதியம் 1.38 மணிக்கு லண்டன் நகருக்கு புறப்பட்டது. ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு சொந்தமான இந்த போயிங் 787-8 ரக விமானத்தில் மொத்தம் பயணிகள், பணியாளர்கள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் சுமார் 600+ அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து, வெடித்து விபத்தில் சிக்கியது. விமானம் விழுந்த இடம் பி.ஜி மருத்துவக் கல்லூரி வளாகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அங்கிருந்த மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் சுமார் 200 பேர் உயிரிழந்துள்ளனர். இதை குஜராத் மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விமான விபத்து தேசத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது. | முழுமையாக செய்திக்கு > அகமதாபாத் விமான விபத்து: உயிரிழப்புகள் முதல் போயிங் நிறுவன விளக்கம் வரை