நகரி,
தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையே காதிகூட மண்டலம் பிப்பிறி என்ற இடத்தில் விவசாயிகள் நேற்று தங்களது நிலங்களில் மக்காச்சோளம் விதைக்க தயாரானார்கள். 14 விவசாயிகள் இந்த பணியில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் திடீரென இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. உடனே அவர்கள் அருகில் இருந்த குடிசை அருகே மழைக்காக ஒதுங்கி நின்றனர்.
அப்போது மின்னல் தாக்கி 3 விவசாயிகள் உயிரிழந்தனர். இதே மாவட்டத்தில் வேலமண்டலத்தில் மின்னல் தாக்கி 2 பெண் விவசாயிகளும், சாங்கிடி என்ற இடத்தில் ஒரு பெண்ணும், சோன்காஸ் என்ற பகுதியில் சுனிதா என்பவரும் மின்னல் தாக்கி இறந்தனர். இவ்வாறு ஒரே நாளில் மின்னல் தாக்கி 6 விவசாயிகள் பலியாகினர்.