அகமதாபாத்: விமான விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, பேரழிவு நடந்த இடம் வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து நேற்று (ஜூன் 12) மதியம் 1.38 மணிக்கு பிரிட்டன் தலைநகர் லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. உயிர் பிழைத்த 40 வயது விஷ்வாஸ் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து நடந்த இடத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) காலை சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டார். அவருடன் ராம் மோகன் நாயுடு, பூபேந்திர படேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர். விமானம் எவ்வாறு மோதியது என்பது தொடர்பாக ராம் மோகன் நாயுடு, பிரதமருக்கு விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே பயணியான விஷ்வாஷ் குமார் ரமேஷை, மருத்துவமனைக்கு சென்று பிரதமர் மோடி நலம் விசாரித்தார். விபத்து தொடர்பாக அவர் கூறியதை கேட்டறிந்தார். மேலும், விமானம் மோதிய இடத்தில் இருந்ததால் காயமடைந்த மருத்துவக் கல்லூரி விடுதி மாணவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறினார்.
விமான விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அகமதாபாத்தில் விபத்து நடந்த இடத்தை இன்று பார்வையிட்டேன். பேரழிவு நடந்த இடம் வருத்தமளிக்கிறது. விபத்துக்குப் பிறகு அயராது உழைக்கும் அதிகாரிகள் மற்றும் குழுக்களை சந்தித்தேன். கற்பனை செய்ய முடியாத இந்த துயரத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுடன் எங்கள் எண்ணங்கள் தொடர்ந்து உள்ளன” என தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்ட மற்றொரு பதிவில், “அகமதாபாத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் நாங்கள் அனைவரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். இவ்வளவு திடீரெனவும், இதயத்தை உடைக்கும் வகையிலும் பல உயிர்களை இழந்தது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. அவர்களை இழந்து வாடும் அனைத்து குடும்பங்களுக்கும் இரங்கல். அவர்களின் வலியை நாங்கள் புரிந்துகொள்கிறோம், மேலும் அந்த வெற்றிடம் வரும் பல ஆண்டுகளுக்கும் நீடிக்கும் என்பதையும் அறிவோம். ஓம் சாந்தி.” என தெரிவித்துள்ளார்.