`மரத்தில் வந்த தண்ணீர்' – மஞ்சள் பூசி வணங்கிய மக்கள்; குடிநீர் குழாய் உடைப்பால் ஏமாற்றம்!

புனேவில் உள்ள பிரேம்லோக் பூங்கா பகுதியில் குல்மோகர் மரம் ஒன்றின் தண்டில் இருந்து தண்ணீர் வந்த வினோத சம்பவம் நடந்தது.

இதைக் கண்ட மக்கள் பயபக்தியுடன் அங்கு கூடி மரத்தில் இருந்து தீர்த்தம் வருவதாக எண்ணியுள்ளனர். மரத்துக்கு மாலை அணிவித்து, மஞ்சள், குங்கும் பூசி வணங்கியுள்ளனர்.

பின்னர் உள்ளூர் நிர்வாகம் வருவது அதிசய தண்ணீர் அல்ல என்றும், நிலத்தடி நீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே தண்ணீர் வந்துள்ளது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

சஹாரா சொசைட்டி அருகில் உள்ள மெயின் ரோட்டில் இந்த மரம் இருந்துள்ளது. மரத்தைச் சூழ்ந்த மக்கள் கசிந்த நீரை, புனித தண்ணீராக நினைத்தது குடித்தது மட்டுமல்லாமல் அதற்கு நோய்களைக் குணப்படுத்தும் சக்திகள் இருந்ததாகவும் நம்பியுள்ளனர்.

எனினும் தண்ணீர் கசிவு பற்றிய செய்திகள் வந்ததுமே பிம்ப்ரி சின்ச்வாட் நகராட்சி (பிசிஎம்சி) அதற்கான காரணங்களைக் கண்டறிந்து சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த மரம், புனித தண்ணீர் பற்றிய வீடியோக்கள் ட்விட்டரில் வைரலாகியிருக்கின்றன.

இந்த சம்பவம் இந்திய மக்களிடையே மூட நம்பிக்கைகள் எந்த அளவு மலிந்து கிடக்கின்றன என்பதைக் கோடிட்டுக்காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டனர்.

மதுராவில் நடந்த சம்பவம்..

கடந்த ஆண்டு இதேபோல மதுராவின் பிரசித்திபெற்ற பாங்கே பிஹாரி கோவிலில் இருந்த யானை சிலையில் இருந்து கசிந்த நீரை மக்கள் தீர்த்தமாக எண்ணி பருகினர். மக்கள் அதை ‘சரண் அமிர்தம்’ என அழைத்தனர்.

பின்னர் அந்த கோவிலின் பூசாரி சிலையில் இருந்து கசியும் தண்ணீர் ஏசியில் இருந்து வெளியேறியது என்பதை விளக்கியுள்ளார்.

பூசாரி கூறியதையும் கண்டுகொள்ளாத மக்கள் தொடர்ந்து அந்த தண்ணீரைப் பிடித்து குடித்து மேலே தெளித்துக்கொண்டனர். இந்த சம்பவம் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.