AUS vs SA: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டி லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டெம்பா பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணியும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும் மோதி வருகிறது. ஜூன் 11ஆம் தேதி தொடங்கிய போட்டியில் இன்று(ஜூன் 13) மூன்றாவது நாள் நிறைவடைந்துள்ளது.
இப்போட்டியில் முதலில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸ் முடிவில் 212 ரன்களை அடித்தது. அதிகபட்சமாக வெப்ஸ்டர் 72 ரன்களும் ஸ்மீத் 66 ரன்களையும் அடித்தனர். பந்து வீச்சில் ரபாடா 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை பிடித்த தென்னாப்பிரிக்கா அணி 138 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியா அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 6 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.
இச்சூழலில், 74 ரன்கள் லீடுடன் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் பிடிக்க தொடங்கியது. அதில்,207 ரன்களை மட்டுமே ஆஸ்திரேலியா அணியால், அடிக்க முடிந்தது. தொடக்கத்தில் மளமளவென விக்கெட்களை இழந்த ஆஸ்திரேலிய அணி, இறுதி நேரத்தில் ரன்களை சேர்த்தது. அலக்ஸ் கேரி மற்றும் மிட்செல் ஸ்டார்க் ரன்களை சேர்த்தனர். அவர்கள் முறையே 43 மற்றும் 58 ரன்களை அடித்திருந்தனர். இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணிக்கு 282 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா.
282 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றுவிடலாம் என தென்னாப்பிரிக்கா அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் ரிக்கல்டன் வந்த வேகத்தில் வெளியேறினார். அவர் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து எய்டன் மார்க்ரம் உடன் வியான் முல்டன் கைகோர்த்தார். இந்த கூட்டணி 61 ரன்கள் சேர்த்தது. வியான் முல்டர் 27 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் டெம்பா பவுமா மார்க்ரம் உடன் சேர்ந்து ரன்களை சேர்க்க தொடங்கினார். இருவரும் நக்கூறம் போல் களத்தில் நிலைத்தனர். ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களால் இவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. மார்க்ரம் சதம் விளாசினார். பவுமாவும் அரைசதம் விளாசினார். இவரும் சேர்ந்து தென்னாப்பிரிக்கா அணியை வெற்றி பாதைக்கு அழைத்து வந்திருக்கின்றனர்.
மூன்றாம் நாள் முடிவில், தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. மார்க்ரம் 102 ரன்களுடனும் பவுமா 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். வெற்றிக்கு இன்னும் 69 ரன்களே தேவை என்ற நிலையில் இன்றைய நாள் முடிந்திருக்கிறது. நாளை இந்த ரன்களை அடித்து தென்னாப்பிரிக்கா அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்காவது நாள் போட்டி இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும்.
மேலும் படிங்க: கடைசியாக 2008ல் தான்… ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 282 இலக்கை சேஸ் செய்யுமா தென்னாப்பிரிக்கா?
மேலும் படிங்க: ஒரு வாரத்தில் டெஸ்ட் தொடர்… அவசர அவசரமாக இந்தியா வந்த கம்பீர் – என்னாச்சு?