நேற்று செய்தியாளரை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ‘2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, அன்புமணிக்கு தலைவர் பதவியை தருகிறேன்’ என்று கூறியிருந்தார்.
ஆனால், இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ராமதாஸ், தன் நிலைப்பாட்டை மாற்றி பேசியுள்ளார்.
ராமதாஸ் கூறியதாவது, “2026 தேர்தலுக்கு பிறகு, அன்புமணிக்கு பாமகவின் தலைவர் பதவியை தருகிறேன் என்று கூறியிருந்தேன். ஆனால், என் மூச்சு இருக்கும் வரைக்கும் நான் தான் தலைவராகத் தொடர்வேன். அன்புமணியின் செயல்பாடுகளை பார்க்கும்போது, அவருக்கு நான் தலைவர் பதவியை வழங்கமாட்டேன்.

என் உத்தரவுப்படி, அன்புமணி செயல் தலைவராக இருப்பதாக சொன்னால் எனக்கு மகிழ்ச்சி. அன்புமணியை பார்த்தாலே ரத்த அழுத்தம் கூடுகிறது. மேடையில் மைக்கை தூக்கி அடிக்கிறார். தந்தையையும் தாயையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். அவரது அம்மாவை பாட்டிலால் தாக்குகிறார்.”
நேற்று அன்புமணிக்கு தலைவர் பதவியை தருவேன் என்று கூறிய நிலையில், இன்று மாற்றியிருப்பது கட்சியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
அடுத்த ஆண்டு தேர்தல் வர இருக்கும் நிலையில், இந்த உள்கட்சி பூசல் பாமகவிற்கு கூட்டணி பேச்சுவார்த்தையின் பின்னடைவை தரலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
நேற்றே கூட்டணி குறித்து நான் தான் முடிவு செய்வேன் என்று கூறிய நிலையில், இன்று வாழ்நாள் முழுவதும் தானே தலைவர் என்று அறிவித்திருக்கிறார் ராமதாஸ்.
இன்னொரு பக்கத்தில் அன்புமணி தலைமையில் சென்னை பனையூரில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.