"வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத ஒரு விஷயத்தை எனக்குப் பண்ணியிருக்கிறார் வெற்றிமாறன்!" – சேத்தன்

கடந்தாண்டு தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படைப்புகளின் மூலமாக நமக்குத் திறமையான பல நடிகர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் கிடைத்திருக்கிறார்கள்.

மேலும், பல மூத்த கலைஞர்களும் கடந்தாண்டு வெளியான படைப்புகளில் ஜொலித்திருந்தனர்.

அப்படியான கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில், வருடந்தோறும் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா நடைபெறும். அந்த வரிசையில், கடந்த 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகள் சென்னையில் நடைபெற்றது.

2024-ம் ஆண்டுக்கான சிறந்த வில்லனுக்கான விருதை விடுதலை 2, ஜமா படத்துக்காக நடிகர் சேத்தன் பெற்றார். இந்த விருதை நடிகர் நாசர் வழங்கினார்.

விருதை வழங்கிய நாசர், “சினிமாவைக் கற்பதுபோல சினிமாவின் தரம் குறித்து ஆனந்த விகடனிலிருந்துதான் நாங்கள் கற்றுக்கொண்டோம். ஒரு படம் வெளியாகும்போது அதன் விமர்சனம் என்பது மிக முக்கியம்.

முதலில் அச்சில் ஆரம்பித்தது. எல்லோரும் அப்போது ஆனந்த விகடன் என்ன மார்க் கொடுக்கிறது, என்ன விமர்சனம் வைக்கிறது, என்ன கருத்தைச் சொல்கிறது என்பதை வைத்துத்தான் நாங்கள் அந்தப் படத்துக்குச் செல்வோம்.

ஆனால், இன்று ஒரு கோடிப் பேர் படம் பார்க்கிறார்கள் என்றால், ஒரு கோடிப் பேரும் விமர்சனம் வைக்கலாம் என்பதுதான் இன்றைய நிலை. இது கொஞ்சம் மோசமான நிலை என்றுதான் சொல்ல முடியும்” என்று கூறினார்.

விருதைப் பெற்றுக்கொண்டு பேசிய சேத்தன், “விகடனுக்கு நன்றி. ஆனந்த விகடன் சினிமா விருதை ஒவ்வொரு வருடமும் பார்க்கும்போது, இதை நாமும் வாங்க மாட்டோமா என்று எத்தனையோ வருஷங்களாக ஏங்கியிருக்கிறேன்.

நாசர் சார் கையால் இதை வாங்குவது ரொம்பப் பெருமையாக இருக்கிறது. நீங்கள்தான் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு இன்ஸ்பிரேஷன்.

பல வருஷமா சின்னச் சின்ன கேரக்டர் பண்ணிக்கிட்டு இருந்த எனக்கு, எனக்காகவே எழுதுன ரோல் மாதிரி `விடுதலை பார்ட் 1′, `பார்ட் 2′-வுக்கு என்னைத் தேர்வுசெய்த என் நண்பர் வெற்றிமாறனுக்கு நன்றி.

வாழ்நாள் முழுக்க நான் மறக்க முடியாத ஒரு விஷயத்தை எனக்குப் பண்ணியிருக்கிறார்.

இந்த முதல் பார்ட்டுக்கும், செகண்ட் பார்ட்க்கும் நடுவுல பாரி என்ற ஒரு பையன் `ஜமா’னு ஒரு படம் எடுக்கப் போறோம்னு சொல்லி ஒரு ட்ரெய்லர் அனுப்பியிருந்தார்.

அதைப் பார்த்து ரொம்ப இம்ப்ரஸ் ஆகிட்டேன். ஒரு புதுக் கலையைக் கற்றுக்கொள்வதற்கான சான்ஸ். இந்த கேரக்டரை என்னை நம்பிக் கொடுத்ததற்கு பாரிக்கு என் நன்றி” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.