புதுடெல்லி, –
தலைநகர் டெல்லி வெப்பத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது. வெயில் அதிகபட்சமாக 113 டிகிரி வரை சென்றிருக்கிறது. ஆனாலும் காற்றின் ஈரப்பதம் காரணமாக அது 125 டிகிரியை உணர வைக்கிறது. இரவில்கூட பகல் போன்ற வெப்ப சூழலே தென்படுகிறது. ஏ.சி. பயன்படுத்தினாலும் பெரிய அளவில் இதம் இல்லை. ஏ.சி. வசதி இல்லாத மக்களின் நிலைமை பரிதாபமாகவே தெரிகிறது.
இந்த நிலையில் வெப்ப அலை காரணமாக டெல்லிக்கு நேற்று சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டது. இன்றும் (வெள்ளிக்கிழமை) எச்சரிக்கை நீடிக்கிறது. இன்று மாலைக்கு பிறகு நிலைமை ஓரளவு சரியாகலாம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். டெல்லி மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலும் குறிப்பிட்ட இடங்களில் வெப்ப அலை கடுமையாக உள்ளது.