புதுடெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பயணிகள் தீயில் கருகி இறந்தனர். அவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகி உள்ளன.
இதையடுத்து, விபத்து நடந்த இடங்களில் சிதறி உள்ள உடல் பாகங்களை சேகரிக்கும் பணியில் தடயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அந்த பாகங்களின் மரபணு (டிஎன்ஏ) பரிசோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விபத்தில் இறந்த பயணிகளின் உறவினர்கள் பலர் தங்களது டிஎன்ஏ மாதிரிகளை வழங்கி வருகின்றனர். அத்துடன், விமான பயணிகளின் உடைமைகளை வைத்தும் அவர்களது உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
எனினும் பெரும்பாலான உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு தீயில் கருகி உள்ளதால், டிஎன்ஏ பரிசோதனையை அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ளனர். அதற்காக அகமதாபாத்தில் உள்ள தடயவியல் ஆய்வு கூடத்தில் பலர் குவிந்துள்ளனர்.
போலீஸார் கூறும்போது, ‘‘இதுவரை 6 பேரின் உடல்கள் அடையாளம்காணப்பட்டுள்ளன. அவர்களுடைய உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன’’ என்றனர்.