ஈரான் தாக்குதல் எதிரொலி: இஸ்ரேலில் பாதுகாப்பாக இருக்குமாறு இந்தியர்களுக்கு தூதரகம் அலர்ட்

டெல் அவிவ்: ஈரானின் பதிலடி தாக்குததலின் எதிரொலியாக, இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ விமான நிறுவனங்கள் பயணிகள் எச்சரிக்கையாக இருக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தங்கள் நாட்டின் அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல் மீது இன்று (சனிக்கிழமை) அதிகாலை முதல் ஈரான் பதிலடியாக ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதைத் தொடர்ந்து, இஸ்ரேலில் உள்ள தங்கள் நாட்டினருக்கு இந்திய அரசு அவசர ஆலோசனைகளை வழங்கியது. அதே நேரத்தில் ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் ஈரானிய வான்வெளியைத் தவிர்த்து மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியர்களும் விழிப்புடன் இருக்கவும், இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் உள்நாட்டுப் படையினரின் அறிவுறுத்தல்களின்படி பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தயவுசெய்து எச்சரிக்கையாக இருங்கள். நாட்டுக்குள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்திவிடுங்கள். பாதுகாப்பு முகாம்களுக்கு அருகில் இருங்கள். இந்திய குடிமக்களின் பாதுகாப்பு தொடர்பான சூழ்நிலையை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்” என்று பதிவிட்டுள்ளது.

மேலும், “ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், தூதரகத்தின் 24X7 உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். தொலைபேசிக்கு +972 54-7520711, +972 54 3278392 எண்களையும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியையும் தொடர்பு கொள்ளுங்கள்” என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஈரானிய வான்வெளியைத் தவிர்ப்பதால், இந்தியாவுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையிலான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிவுறுத்தலின்படி, “ஈரான் மற்றும் மத்திய கிழக்கின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை தொடர்ந்து வான்வெளி மூடப்பட்டது. எங்கள் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சில விமானங்கள் நீட்டிக்கப்பட்ட மாற்றுப் பாதைகளில் இயக்கப்படுகின்றன.

எதிர்பாராத இந்த வான்வெளி மூடலால் எங்கள் பயணிகளுக்கு ஏற்படும் எந்தவொரு சிரமத்தையும் குறைக்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். ஏர் இந்தியாவில், எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். உங்கள் விமான நிலையை http://airindia.com/in/en/manage/flight-status.html-ல் சரிபார்க்கவும் அல்லது 011 69329333, 011 69329999 என்ற எண்ணில் எங்கள் வாடிக்கையாளர் மையத்தை அழைக்கவும் அல்லது http://airindia.com என்ற எங்கள் வலைதளத்தைப் பார்வையிடுங்கள்” என்று தெரிவித்துள்ளது.

இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மீதான வான்வெளி தொடர்ந்து கிடைக்கவில்லை. சில விமானப் பாதைகளில் மாற்றங்கள் தேவைப்படலாம். இதனால் பயண நேரம் நீட்டிக்கப்படலாம் அல்லது தாமதங்கள் ஏற்படலாம். விமான நிலையத்துக்குச் செல்வதற்கு முன் எங்கள் வலைத்தளம் அல்லது மொபைல் பயன்பாட்டில் உங்கள் விமான நிலையைச் சரிபார்க்க பரிந்துரைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

நிலவரம் என்ன? – முன்னதாக, அணுகுண்டு தயாரிப்பில் தீவிரம் காட்டுவதாக கூறி, ஈரான் மீது இஸ்ரேல் நேற்று தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் விமானப் படையின் 200 போர் விமானங்கள், ஈரானில் 100 இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் 6 அணு விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் 3 பேர் உட்பட 78 பேர் இறந்தனர்; 320 பேர் காயம் அடைந்தனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று மாலையும் இஸ்ரேல் மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 200 இடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.

இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடி தரும் வகையில், இஸ்ரேல் மீது ஈரான் இன்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அயர்ன் டோம் வான் பாதுகாப்பையும் மீறி, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் உள்ள ராணுவத் தலைமையகம் தாக்குதலுக்கு உள்ளானது. ஜெருசலேம் நகர் மீதும் குண்டுகள் விழுந்தன. இந்த தாக்குதலில் 3 பேர் இறந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் அனைத்து பகுதிகளும் தாக்குதலுக்கு உள்ளானதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது கவனிக்கத்தக்கது. மேலும், ஈரானின் ஏவுகணை தாக்குதல் தொடர்ந்தால், அதன் தலைநகர் தெஹ்ரான் பற்றி எரியும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.