“எப்படி உயிர்ப் பிழைத்தேன் என தெரியவில்லை” – பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ் அதிர்ச்சி

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் 242 பேர் பயணம் செய்தனர். அவர்களில் ஒரே ஒரு பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ் மட்டும் (40) உயிர்த் தப்பியுள்ளார்.

அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விமானம் மேலெழுந்ததும் ஏதோ கோளாறு ஏற்பட்டது. உடனடியாக பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் ஒளி வந்தது. விமானத்தை மேலெழுப்ப பைலட்கள் முயற்சித்தார்கள்.

ஆனால், விமானம் முழு வேகத்தில் சென்று கட்டிடத்தின் மீது மோதியது. நான் விழித்துப் பார்த்தபோது, என்னை சுற்றியும் உடல்கள் கிடந்தன. நான் பயந்துவிட்டேன். உடனே எழுந்து ஓடினேன். விமானத்தின் சிதைந்த பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. யாரோ சிலர் என்னை பிடித்து ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.

விபத்தில் நான் சாகப் போகிறேன் என்றுதான் முதலில் நினைத்தேன். எப்படி உயிர்ப் பிழைத்தேன் என்பது எனக்கு தெரியவில்லை. மயக்கத்தில் இருந்து கண்விழித்த போது உயிருடன் இருப்பதை அறிந்தேன். உடனே ‘சீட் பெல்ட்’டை கழற்றி விட்டு எழுந்தேன். என் கண்ணெதிரிலே விமான பணிப் பெண்கள், உறவினர்கள் எல்லோரும் உயிரிழந்தனர்.

நான் எப்படி உயிர்ப் பிழைத்தேன் என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. சில விநாடிகளுக்கு பிறகுதான் தீப்பற்றி எரிந்தது. என் கண்ணெதிரிலேயே 2 விமானப் பணிபெண்கள், பயணிகள் எரிந்தனர். இவ்வாறு விஸ்வாஷ் கூறினார். விஸ்வாஷ் மேலும் கூறும்போது, ‘‘நான் தரை தளத்துக்கு அருகில் இருந்தேன். அங்கிருந்துதான் நான் வெளியில் வந்தேன். கட்டிடத்தின் சுவர் எதிர்பக்கம் இருந்தது. அங்கிருந்து வெளியேற முடியும் என்று நான் நினைக்கவில்லை’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.