சென்னை,
நடப்பு தமிழ்நாடு பிரீமியர் லீக் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதில் சேலத்தில் இன்று நடைபெற்றுவரும் 9வது லீக் ஆட்டத்தில் சேலம் ஸ்பார்டன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
இதில், டாஸ் வென்ற சேலம் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய திருப்பூர் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் துஷார் ரஹ்ஜா 28 பந்துகளில் 5 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 74 ரன்கள் குவித்தார். சேலம் தரப்பில் அந்த அணியின் பொய்யாமொழி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சேலம் அணி 19.5 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சேலம் அணி வெற்றி பெற்றது. சேலம் அணி பெற்ற 3வது வெற்றி இதுவாகும்.