பியாங்க்யாங்,
கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத சோதனை மூலம் வடகொரியா அவ்வப்போது பதற்றத்தை தூண்டுகிறது. எனவே அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்க வடகொரியாவுக்கு ஐ.நா. தடை விதித்துள்ளது. ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அணு ஆயுத உற்பத்தியை அதிகரித்து வருகிறது.
அதன் ஒருபகுதியாக வடகொரியா அணு ஆயுத கப்பலை உருவாக்கியது. 5 ஆயிரம் டன் எடை கொண்ட இந்த கப்பலின் சோதனை முயற்சி கடந்த மாதம் 21-ந்தேதி நடைபெற்றது. அப்போது சாய்வில் இருந்து வழுக்கியதால் கப்பல் சேதமடைந்தது. இதனால் அதிருப்தியடைந்த வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ராணுவ அதிகாரிகளை கடுமையாக சாடினார். இதனையடுத்து அந்த கப்பலை சரிசெய்யும் பணி தொடங்கியது. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில் 2-வது கட்ட சோதனை முயற்சி நடைபெற்றது. மேற்கு துறைமுக நகரமான நாம்போவில் நடந்த இந்த நிகழ்ச்சியை கிம் ஜாங் அன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.