பெலகாவி,
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நேற்று முன்தினம் 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் திடீரென்று அருகில் உள்ள மருத்துவக்கல்லூரி கட்டிடத்தின் மீது விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானி உள்பட 241 பேர் உடல் கருகி பலியானார்கள். விஸ்வாஸ்குமார் ரமேஷ் என்கிற பயணி மட்டும் அதிசயமாக உயிர் தப்பினார். மேலும் விமானம் மருத்துவக்கல்லூரி கட்டிடத்தின் மீது விழுந்ததில் 10-க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றி உருக்கமான தகவல்கள் வெளியாகி வருகின்றன.
நெஞ்சை பதறவைக்கும் இந்த விமான விபத்து பற்றி முன்கூட்டியே பெலகாவியை சேர்ந்த சாமியார் ஒருவர் கணித்து கூறியுள்ளார். அதன்விவரம் பின்வருமாறு:-
கர்நாடக மாநிலம் பெலகாவி (மாவட்டம்) டவுன் நயாநகரில் சுக்தேவானந்தா சுவாமி மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருப்பவர் அபிநவ சித்தலிங்க சுவாமிஜி. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 20-ந்தேதி மடத்தின் திருவிழா நடைபெற்றது. அந்த சமயத்தில் அபிநவ சித்தலிங்க சுவாமிஜி, எதிர்காலத்தை கணித்து அருள்வாக்கு கூறியிருந்தார்.
அதில் அவர், எதிர்வரும் நாட்களில் பலத்த தீவிபத்து ஏற்படும். அதுவும் விமான விபத்தில் சிக்கி பயங்கர தீப்பிடிக்கும். ஒரு நகரம் நாசமாகும் என்று கூறியிருந்தார். ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்து பற்றி தான் சாமியார் கணித்து கூறியிருப்பதாக பக்தர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அத்துடன் அவர் கடந்த ஏப்ரல் 20-ந்தேதி கணித்து அருள்வாக்கு கூறிய சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.