தெஹ்ரான்,
ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்த தாக்குதல் மூலம் இஸ்ரேல் போர் பிரகடனம் செய்திருப்பதாக ஈரான் தெரிவித்து உள்ளது.
இதையடுத்து இஸ்ரேலுக்கு எதிரான பதிலடியை ஈரானும் தொடங்கி உள்ளது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் உள்பட பல்வேறு முக்கிய நகரங்களின் மீது ஈரான் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையொட்டி இஸ்ரேலின் வான் எல்லை மூடப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஈரானில் வசித்து வரும் இந்தியர்களுக்காக ஈரானில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஈரானில் உள்ள இந்தியர்களுக்காக பிரத்யேக டெலிகிராம் குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு வசிக்கும் இந்தியர்கள் அதில் இணைந்து கொள்ள வேண்டும் என்று தூதரகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் அங்குள்ள இந்தியர்கள் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் தங்கள் விவரங்களை தூதரகம் வெளியிட்டுள்ள இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் அவசர உதவிக்காக தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் பின்வருமாறு;-
மொபைல்: +98 9128109115, +98 9128109109
வாட்ஸ்அப் : +98 9010144557, +98 9015993320, +918086871709
பந்தர் அப்பாஸ்: +98 9177699036
சகேதான்: +98 9396356649
மேலும் இந்திய தூதரகத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்றும், அவசியம் இல்லாமல் வெளியே செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.