காவிரி டெல்டா பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்தார் முதல்வர் ஸ்டாலின்

காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை, சம்பா சாகுபடி பாசனத்துக்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த சாகுபடிக்கு தேவையான தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி திறந்து விடப்படுவது வழக்கம். அதன்படி, மேட்டூர் அணையில் இருந்து முதல்வர் ஸ்டாலின் கடந்த 12-ம் தேதி தண்ணீர் திறந்துவிட்டார். இந்த தண்ணீர் கரூர், திருச்சி வழியாக நேற்று மாலை தஞ்சாவூர் மாவட்ட எல்லையான கல்லணைக்கு வந்தது.

இதற்கிடையே, தஞ்சாவூரில் 2 நாட்கள் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் கல்லணைக்கு வந்து, சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுத்தார். பின்னர், மாலை 6.05 மணிக்கு அங்கிருந்து நடந்து சென்று கல்லணையில் இருந்து காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். விவசாயம் செழிக்க வேண்டி ஆற்றில் பூக்கள், நவதானியங்களை தூவினார்.

காவிரி, வெண்ணாற்றில் விநாடிக்கு தலா 1,500 கன அடி, கல்லணை கால்வாயில் 500 கன அடி, கொள்ளிடத்தில் 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடியில் 13 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.

இதையொட்டி, கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் உள்ள ஷட்டர்கள் சீரமைக்கப்பட்டு புதிய வண்ணம் பூசப்பட்டிருந்தது. கரிகால சோழன், ராஜராஜசோழன், அகத்தியர், காவிரி தாய், சர் ஆர்தர் காட்டன் சிலைகளுக்கும் வண்ணம் பூசப்பட்டிருந்தது.

முன்னதாக, டெல்டா பகுதிகளில் நீர்நிலைகள் தூர் வாரப்பட்டது, சாகுபடி விவரங்கள் குறித்து அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஆட்சியர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார். ‘‘மேட்டூர் அணையின் நீர் இருப்பு, நீர்வரத்து, மழை, கர்நாடக அணைகளில் இருந்து கிடைக்க வேண்டிய நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு தேவைக்கேற்ப தண்ணீரை பகிர்ந்தளிக்க வேண்டும். பாசனத்துக்கு வழங்கப்படும் நீரை சிக்கனமாகவும், தேவைக்கேற்பவும் பயன்படுத்தி அதிக மகசூல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். உரங்கள், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’’ என அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, எஸ்.எஸ்.சிவசங்கர், கோவி.செழியன், அன்பில் மகேஸ், மெய்யநாதன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, எஸ்.கல்யாணசுந்தரம், எஸ்.முரசொலி, ஆர்.சுதா, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ்.விஜயன், முன்னாள் மத்திய அமைச்சர் பழநிமாணிக்கம் மற்றும் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், சாக்கோட்டை எஸ்.அன்பழகன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், நீர்வளத் துறை அரசு செயலர் ஜெ.ஜெயகாந்தன், மாவட்ட ஆட்சியர்கள் பிரியங்கா பங்கஜம் (தஞ்சாவூர்), பிரதீப்குமார் (திருச்சி), மோகனசந்திரன் (திருவாரூர்), ஸ்ரீகாந்த் (மயிலாடுதுறை), ஆகாஷ் (நாகை), மு.அருணா (புதுக்கோட்டை) ஆகியோர் கலந்துகொண்டனர்.

26 ஆண்டுகளுக்கு பிறகு.. காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கடந்த 1998 ஜூன் 23-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி கல்லணையை திறந்து வைத்தார். அதன்பிறகு, கல்லணையில் அமைச்சர்கள் மட்டுமே தண்ணீர் திறந்து வந்தனர். 26 ஆண்டுகளுக்கு பிறகு கல்லணையில் முதல்வர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்துள்ளார். தவிர, மேட்டூர் அணை, கல்லணையை ஒரே ஆண்டில் திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.