'தெய்வத்தின் குரல் 8 – ம் பாகம்' உள்ளிட்ட 5 நூல்கள் வெளியீடு- மகாபெரியவர் பக்தர்கள் மகிழ்ச்சி!

நடமாடும் தெய்வமாக இந்த மண்ணுலகில் வாழ்ந்த காலத்தில் மகாபெரியவர் ஆற்றிய அருளுரைகளின் தொகுப்பே, ‘தெய்வத்தின் குரல்.’ 7 தொகுதிகளாக வெளியான இந்த நூல்களை தொகுத்து நமக்கு அளித்தவர் ரா. கணபதி என்னும் தமிழறிஞர். கல்கி முதலான புகழ்பெற்ற இதழ்களில் பணியாற்றிய ரா.கணபதி, தன் வாழ்வில் 30 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார் என்றாலும் தெய்வத்தின் குரல் அவரின் மாபெரும் தொண்டாகக் கருதப்படுகிறது. மகாப்பெரியவரின் அனுமதியோடு இவர் இந்தப் பணியைச்செய்தார். அவர் வாழ்ந்த காலத்தில் 7 தொகுதிகளும் வெளியாயின.

அதன்பின் அவர் தொகுத்த பல விஷயங்கள் நூல்வடிவம் பெறாமலேயே இருந்தன. ரா. கணபதியை அண்ணா என்று அவரை அன்போடு அழைக்கும் அன்பர்கள் அவற்றைத் தொகுத்து நூல்வடிவம் கொடுக்கும் முயற்சியில் இறங்கினர். அவர்களில் மிகவும் முக்கியமானவர் வேதா வெளியீட்டகத்தின் ஸ்ரீதர். அவரின் அரும்பெரும் முயற்சியால் தற்போது, ‘ஆசார்ய ஸ்வாமிகள் அருளுரை’ என்னும் தலைப்பில் தெய்வத்தின் குரல் எட்டாம் பாகம் வெளியாகியுள்ளது.

தெய்வத்தின் குரல்

இந்த நூல் ஜூன் மாதம் 10 – ம் தேதி மகாபெரியவரின் அவதார தினமான அனுஷ நட்சத்திர நாளில் திருப்பதியில் வைத்து காஞ்சி மடத்தின் பீடாதிபதியான ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது. இத்துடன் சேர்த்து, மைத்ரீ, தினசரி பெரியவா தியானம், காஞ்சி முனிவர் நினைவுக் கதம்பம், பாரதிய சமுதாயக் கட்டமைப்பின் ஆணிவேர், நந்தவனத்தில் ஓர் ஆண்டி ஆகிய நூல்களும் வெளியிடப்பட்டன.

இந்த 5 நூல்களின் நூல் அறிமுகக் கூட்டம் நேற்று சென்னை மயிலாப்பூர் பி.எஸ் மேல்நிலைப்பள்ளி தக்ஷிணாமூர்த்தி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பி.எஸ் இன்ஸ்டிட்டிட் ஆஃப் மியூசிக், ஆர்ட் & கல்சர் அமைப்பைச் சேர்ந்த கே.வி.எஸ். கோபால கிருஷ்ணன், ஆன்மிக சொற்பொழிவாளர் இசைக்கவி ரமணன், விவேகானந்த கல்விக் குழுமத்தைச் சேர்ந்த எம். என். வெங்கடேஷ், ஒரே நாடு இதழின் ஆசிரியர் இராம நம்பி நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

நிகழ்வின் தொடக்கமாக பக்தி இசை அமைந்தது. அதன்பின் பாரதி தமிழன் வரவேற்புரை வழங்க அவரைத் தொடர்ந்து பதிப்பாளர் ஸ்ரீதர் உரையாற்றினார். அவர் தன் உரையில் இந்த நூல் வெளியிடுவதன் அவசியத்தையும் சிரமங்களையும் பகிர்ந்துகொண்டார். மேலும் இந்த நூல் உருவாக்கத்திற்கு உதவிய நன்கொடையாளர்களை நன்றியோடு நினைவுகூர்ந்தார். மேலும் இவர், ‘மைத்ரீ’ நூல் குறித்தும் பேசினார். “மைத்ரீ, மகாபெரியவர் வாழ்வில் நிகழ்ந்த மனம் உருக்கும் 86 சம்பவங்களைச் சொல்லும் நூல். வாசிக்கும் ஒவ்வொருவரின் மனத்தோடு பேசக்கூடியது. மகாபெரியவர் யார் என்பதை இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ள உதவும் நூல்” என்று பேசினார் ஸ்ரீதர்.

அடுத்ததாக வெங்கடேஷ், ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி’ நூல் குறித்துப் பேசினார். இந்த நூல், ரா. கணபதி குறித்த நினைவுகளின் தொகுப்பாக மலர்ந்திருக்கிறது. இந்த நூலின் ஆசிரியர் ஸ்ரீதர். ‘நவீன வியாசர்’ என்று ரா. கணபதியைக் குறிப்பிடும் நூலாசிரியர் அவரோடு பழகிய போது நிகழ்ந்த சம்பவங்களை விளக்குகிறார். “நூலின் மொழிநடை அனுபவத்தால் நிறைந்த ஒன்றாக அமைந்திருக்கிறது. நூலில் எங்கும் ரா. கணபதியும் ஸ்ரீதரும் இணைந்து நிற்கும் படம் இல்லை என்றாலும் நூல் முழுவதும் சொல்லப்படும் காட்சிகள் வழியாக அவர்கள் இருவரையும் வாசகர்கள் தம் மனக்கண்ணால் காணமுடியும்” என்று புகழாரம் சூட்டினார்.

அடுத்ததாக கே.வி.எஸ். கோபால கிருஷ்ணன், தினசரி பெரியவா தியானம் நூலை அறிமுகப்படுத்தினார். “இந்த நூல் அறிமுகக் கூட்டம் நடைபெறும் இந்த இடம் மகாபெரியவரின் பாதம் பட்ட இடம். 1966 – ம் ஆண்டு அவர் இங்கு வந்து அருளுரை வழங்கியிருக்கிறார். முன்பு, ‘சுவாமி சித்பவானந்த தினசரி தியானம்’ என்ற நூல் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. அப்படி ஒரு நூல் மகாபெரியவரின் அருளுரைகளால் அமைக்கப்பட்டால் நன்றாக இருக்குமே என்னும் ஆவலைப் பூர்த்தி செய்திருக்கிறது, ‘தினசரி பெரியவா தியானம்’ நூல்.

ஜனவரி 1 – ம் தேதி முதல் டிசம்பர் 31 – ம் தேதி வரை தினமும் நாம் படித்து மகிழ ஆகச்சிறந்த அருளுரைகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. ஜனவரி 1 – ம் தேதி பிள்ளையார் சுழி குறித்த குறிப்போடு தொடங்கி ஆண்டின் நிறைவான டிசம்பர் 31 ம் தேதி, ஆஞ்சநேயர் குறித்த தகவலோடு முடிந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நூல் முழுவதும் தர்மத்தைக் கடைப்பிடிப்பதன் முக்கியத்துவம் விளக்கப்படுகிறது. ஒருவருக்குக் கர்ம மார்க்கமும் முக்கியம் பக்தி மார்க்கமும் முக்கியம் என்பதை மிக அழகாக விளக்குகிறது இந்த நூல். இதை ஒவ்வோர் ஆண்டும் அந்தந்தத் தேதியில் வாசித்து வந்தாலே தெய்வத்தின் குரல் முழுமையையும் வாசிக்கும் பலன் கிடைக்கும்” என்பதை விளக்கினார்.

அடுத்ததாக நம்பி நாராயணன், பாரதிய சமுதாயக் கட்டமைப்பின் ஆணிவேர் என்னும் நூலை அறிமுகம் செய்து பேசினார். ‘இந்திய தேசிய ஆன்மாவுக்கு ஏற்பட்டுள்ள சோதனையும் அதற்கான காரணங்களும்’ என்னும் நேருவின் கட்டுரைக்கு பதில் சொல்லும் விதமாக மகாபெரியவர் அருளிய தீர்வுகள் குறித்த கட்டுரையே இந்த நூலின் சாரம். இந்த நூல் இந்திய தேசியம் குறித்த முக்கியமான பார்வையை முன்வைக்கிறது என்று பேசினார் நம்பி நாராயணன்.

இறுதியாக இசைக்கவி ரமணன் தன் வசீகரிக்கும் குரலால் குருவின் மகிமையைப் போற்றும் பாடலோடு தன் உரையைத் தொடங்கினார். ‘ஆசார்ய சுவாமிகளின் அருளுரை’ என்னும் தெய்வத்தின் குரல் எட்டாம் பாகம் பேசும் விஷயங்களில் சிலவற்றை எடுத்துப் பேசினார்.

“நூலில் மனமாற்றம், ரசவாதம் குறித்து மகாபெரியவர் கூறும் கருத்துகள் முக்கியமானவை. ரசவாதம் என்பது ஒருபொருளை வேறு ஒரு பொருளாக மாற்றுவதை விட அப்பொருளின் உயரிய தன்மையை அடையச் செய்வதே அதன் வெற்றி என்கிறார் பெரியவர். வைத்தீஸ்வரன் கோயிலில் அருளும் தையல் நாயகி குறித்த உரையாடலில் அவர் வெளிப்படுத்தும் கருத்துகள் அற்புதமானவை.

தெய்வத்தின் குரல் 8 ம் பாகம்

‘தைவது’ என்னும் சொல்லுக்கு அலங்கரிப்பது என்றும் பொருள். அப்படி அலங்கார பூஷிதையாகத் திகழும் பாலாம்பிகையின் அம்சமே தையல் நாயகி என்கிற விளக்கத்தைச் சொல்கிறார் மகா பெரியவர். கூடவே சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படும், ‘பருத்திபெண்கள்,’ ஆங்கில இலக்கியம் போற்றும், ‘Spinsters’

போன்ற சொற்கள் குறித்து அவர் அளிக்கும் விளக்கங்கள் அவரின் அறிவின் விசாலத்தை நமக்கு உணர்த்துபவை.

குதம்பைச் சித்தர் குறிப்பிடும், ‘மாங்காய்ப் பால் – தேங்காய்ப் பால்’ பற்றிய செய்திகளும் சுவாரஸ்யமானவ. இதைத் தொகுத்து அளித்த ஸ்ரீதரின் பணி அபரிமிதமானது. வருங்கால சந்ததியருக்கு ஆற்றியிருக்கும் மாபெரும் தொண்டு இது” என்று பேசினார்.

நிகழ்வில் நன்கொடையாளர், ‘யூனிஃபை கேப்பிட்டல்’ நிறுவனத்தைச் சேர்ந்த மாறன் கலந்துகொண்டு இந்த நூல்கள் ஆக்கத்திற்கு உதவிய அனைவரையும் கௌரவித்தார். மேலும், ‘ஆசார்ய ஸ்வாமிகள் அருளுரை’ நூல் விற்பனை மூலம் கிடைக்கும் தொகை முழுவதும் காஞ்சி மடத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் பழங்கால ஓலைச் சுவடிகள் பாதுகாப்புத் திட்டமான, ‘சாஸ்வதா ஐஸ்வர்யம்’ திட்டத்திற்கே அளிக்கப்பட இருக்கிறது. எனவே உலகெங்கும் இருக்கும் மகாபெரியவர் பக்தர்கள் இந்த நூலினை வாங்கிப் பயன் அடையுமாறு ஸ்ரீதர் வேண்டிக்கொண்டார்.

நிகழ்வில் ரா. கணபதியின் குடும்பத்தைச் சேர்ந்த யசோத் உள்ளிட்ட மகாபெரியவரின் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.