புது டெல்லி: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் போயிங் விமானத்தை துருக்கி நிறுவனம் பராமரித்ததில் சதி இருக்கலாம் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்காக, அகமதாபாத் கிளம்பி வந்த துருக்கி நாட்டுக் குழுவினர் சம்பந்தப்பட்ட போயிங் விமானத்தை தாங்கள் பராமரிக்கவில்லை என மறுப்பு தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத் விமான விபத்தில் அதில் பயணித்த 241 பேர் உள்பட 270 பேர் உயிரிழந்தனர். விபத்துக்குள்ளான இந்த போயிங் விமானம் துருக்கி நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டதாக சில குற்றச்சாட்டுக்கள் சமீபத்தில் எழுந்தன.
இப்பிரச்சனையில், போயிங்கின் பராமரிப்பு உரிமை கோரலை துருக்கி நிறுவனம் நிராகரித்துள்ளது. மேலும், இதற்காக, இந்தியா வந்த துருக்கியின் விபத்து புலனாய்வு பணியகக் குழுவினர் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: விபத்துக்குள்ளான போயிங் 787-8 வகை விமானம் துருக்கி தொழில்நுட்பக் குழுவால் பராமரிக்கப்பட்டது என்று கூறப்படும் தகவல்கள் உண்மையல்ல.
இந்த கருத்துக்கள், துருக்கி – இந்திய நாடுகளின் நல்லுறவை பாதிக்கும் வகையில் கூறப்பட்டுள்ளது. ஏர் இந்தியா மற்றும் துருக்கி விமான தொழில்நுட்பக் குழுவின் இடையே 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இந்த ஒப்பந்தங்களின் கீழ் பி777 வகை விமானங்களின் பரந்த உடற்பகுதிகள் மட்டுமே பராமரிக்கப்படுகின்றன. விபத்துக்குள்ளான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் எங்கள் ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை.
துருக்கி தொழில்நுட்பக் குழு இன்றுவரை அத்தகைய ஏர் இந்தியா விமானங்களை பராமரிக்கவில்லை. விபத்துக்குள்ளான விமானத்தின் இறுதி பராமரிப்பை எந்த நிறுவனம் செய்தது என்பதும் எங்களுக்குத் தெரியும்.
ஆனால், இந்த விஷயத்தில் அவர்களைப் பற்றி அறிக்கையில் வெளியிட எங்களுக்கு எந்த தேவைகளும் இல்லை. ஒரு தவறானத் தகவலை மையமாக்கி, சர்வதேச அரங்கில் துருக்கியை பிரதிநிதித்துவப்படுத்துவது சரியல்ல.
எங்களது பிரபல நற்பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்துடன் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபோன்ற தவறான நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து அதற்கு உகந்த பதிலை நாங்கள் அளிப்போம்.
குஜராத்தில் ஏற்பட்ட சோகமான விமான விபத்தால் ஏற்பட்ட இந்திய மக்களின் வலியை துருக்கி நாடு உண்மையாகப் பகிர்ந்து கொள்கிறோம். இவ்வாறு துருக்கியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக குஜராத் விமான விபத்தின் மீது பாபா ராம்தேவும் குற்றம் சாட்டியிருந்தார். அதில் அவர், “விமானத்தின் பராமரிப்பு மற்றும் சேவை துருக்கிய நிறுவனத்தால் செய்யப்பட்டது என்பதை நான் அறிந்தேன்.
விமானப் போக்குவரத்துத் துறையின் மூலம் இந்தியா இதனை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும். அந்த நிறுவனம் சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகம் உள்ளது. இதுபோன்ற முக்கியமான விஷயங்களில் வெளிநாட்டு நிறுவனங்கள் தலையிடுவதை இந்தியா தடுக்க வேண்டும்.’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தோரில் 19 பேரின் டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வெளியாகி உள்ளன. அடையாளம் காணப்பட்ட 11 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.