ஈரானின் பாதுகாப்பு அமைச்சகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், மத்திய கிழக்குப் பகுதியில் போர்ப் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆபரேஷன் ரைசிங் லயன் (Operation Rising Lion) எனும் ராணுவ நடவடிக்கை மூலம், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் ராணுவ தளவாடங்கள், ராணுவ அலுவலகங்கள் மற்றும் அணுசக்தி கட்டமைப்புகள் ஆகியவற்றின் மீது இஸ்ரேல் கடந்த ஜூன் 13 ஆம் தேதி தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் இன்று மீண்டும் ஈரானில் உள்ள எரிசக்தி உற்பத்தி, பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகம் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறது. இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் நிலவி வரும் போர்ப் பதற்றம் மேலும் அதிகரித்திருக்கிறது.
இதனிடையே, தங்கள் நாட்டு மக்களை, பதுங்கு குழிக்குள் பாதுகாப்பாக இருக்குமாறு இஸ்ரேல் அரசு அறிவுறுத்தி இருக்கிறது. இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடியாக இஸ்ரேலின் பல்வேறு முக்கிய நகரங்களின் மீது ஈரான் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

ஈரான் தாக்குதலைத் தடுத்தாலோ, இஸ்ரேலுக்கு உதவினாலோ, அந்த நாடுகளின் ராணுவ மற்றும் கடற்படைத் தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.