டிஎன்பிஎல் பத்தாவது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியை லைக்கா கோவை கிங்ஸ் அணி எதிர்கொண்டது. முதலில் டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் இன்னிங்ஸை தொடங்கிய லைக்கா கோவை கிங்ஸ் தொடக்கம் முதலே சேப்பாக் அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. தொடக்க வீரராக களமிறங்கிய லோகேஸ்வர் 9 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து களம் இறங்கிய சச்சின் ரன் எதுவும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். நிதானமாக ஆடிய மற்றொரு தொடக்க வீரர் ஜித்தேஷ் குமார் 20 பந்துகளில் 42 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களமிறங்கிய சித்தார்த் 26 ரன்களுக்கும், குரு ராகவேந்திரன் 25 ரன்களுக்கும், கோவை அணியின் கேப்டன் ஷாருக்கான் 20 ரன்களுக்கும், மாதவ பிரசாத் 17 ரன்களுக்கும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர். 19.4 ஓவர் முடிவில் கோவை அணி 144 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. சேப்பாக் அணியில் சிறப்பாக பந்து வீசிய அபிஷேக் தன்வர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிரேம்குமார், விஜய் சங்கர் தலா 2 விக்கெட்டுகளையும், சிலம்பரசன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று எளிய இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் அணி வீரர்கள் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஆசிக் 22 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றொரு தொடக்க வீரர் மோஹித் ஹரிஹரன் 24 பந்துகளில் 21 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார். பின்னர் களம் இறங்கிய சேப்பாக் அணியின் கேப்டன் பாபா அபரஜீத் 26 பந்துகளில் 48 ரன்களும், விஜய் சங்கர் 19 பந்துகளில் 34 ரன்களை குவித்து ஆட்டம் இழக்காமல 15.1 ஓவரில் 146 ரன்கள் எடுத்து சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி வெற்றி பெற்றது. கோவை அணியில் சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வரன், சுப்பிரமணியன் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.