அடுத்த நிதியாண்டில், 24 பெட்டிகளை கொண்ட தூங்கும் வசதி (ஸ்லீப்பர்) வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு பணியைத் தொடங்க சென்னை ஐசிஎஃப் திட்டமிட்டுள்ளது.
உலகப் புகழ்பெற்ற ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகளில் ஒன்றாக சென்னை பெரம்பூர் ஐ.சி.எஃப். தொழிற்சாலை திகழ்கிறது. இங்கு பல்வேறு வகைகளில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வேக்கு மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்படுகின்றன.
சில ஆண்டுகளாக அதிநவீன வந்தே பாரத் ரயில் தயாரிப்பில் ஐசிஎஃப் ஆர்வம் காட்டுகிறது. வந்தே பாரத் ரயிலைப் பொறுத்தவரை, சென்னை ஐ.சி.எஃப்-ல்தான் முதன்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ‘ரயில் 18’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. நாட்டிலேயே அதிவேகத்தில் செல்லும் இந்த ரயிலுக்கு ‘வந்தே பாரத் ரயில்’ என்று பெயரிட்டு, இதன் சேவையை, புதுடில்லி – வாராணசி இடையே பிரதமர் மோடி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கி வைத்தார்.
தற்போது நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அனைத்தும் குளிர்சாதன வசதி, இருக்கை வசதி கொண்டவை ஆகும். வந்தே பாரத் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையடுத்து, தூங்கும் வசதி (ஸ்லீப்பர்) கொண்ட வந்தே பாரத் ரயில், பார்சல் ரயில், வந்தே மெட்ரோ ரயில், சாதாரண வந்தே பாரத் ரயில் உள்ளிட்ட வகைகளில் மெட்ரோ ரயில்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இவற்றில் சாதாரண வந்தே பாரத் ரயில், வந்தே மெட்ரோ ரயில் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, 16 பெட்டிகள் கொண்ட தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில் பெங்களூருவில் உள்ள பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது. இந்த ரயிலுக்கு ஐ.சி.எஃப்-ல் பல்வேறு சோதனைகள் நடத்தி முடித்து, ரயில்வே வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோன்று, மேலும் சில தூங்கும் வசதி வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, சென்னை ஐ.சி.எஃப் அதிகாரிகள் கூறியதாவது: சென்னை ஐ.சி.எஃப்-க்கு இருக்கை வசதி கொண்ட 97 வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து வழங்க ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது வரை, 88 ரயில்களை தயாரித்து கொடுத்து விட்டோம். இந்த ரயில்கள் தெற்கு ரயில்வே உள்பட பல்வேறு ரயில்வே மண்டலங்களில் இயக்கப்படுகின்றன. மீதமுள்ள 9 வந்தே பாரத் ரயில்கள் இந்த நிதியாண்டுக்குள் தயாரித்து வழங்க முடிவு செய்து உள்ளோம்.
இதையடுத்து, தூங்கும் வசதி கொண்ட 9 வந்தே பாரத் ரயில்களை பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வழங்குவோம். அடுத்த நிதியாண்டில், 24 பெட்டிகளுடன் தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பு பணியை ஐ.சி.எஃப்-ல் தொடங்க திட்டமிட்டுளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தூங்கும் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களைப் பொறுத்தவரை, முதல்கட்டமாக, 50 ரயில்கள் தயாரிப்பதற்கான ஆர்டரை ரயில்வே வாரியம் ஐ.சி.எஃப்-க்கு கொடுத்துள்ளது. இவை 16 பெட்டிகளையும், 24 பெட்டிகளையும் கொண்ட ரயில்களாக இருக்கும்.
நாடு முழுவதும் முக்கியமான வழித்தடங்களில் 400 வந்தே பாரத் ரயில்களை இயக்கும் இலக்கில் பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே துறை மேற்கொண்டுள்ளது.