திருநெல்வேலி: ஓ.பன்னீர்செல்வத்தை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி அளிக்கப்பட்டுள்ள மனு மீது உரிய ஆய்வுக்குப் பின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு தெரிவித்தார்.
அதிமுக சின்னத்தை எதிர்த்து கடந்த 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தெரிவித்து தேனியை சேர்ந்த மிலானி என்பவர் சட்டப் பேரவை தலைவரிடம் மனு அளித்துள்ளார். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவரிடம், ஓபிஎஸ்ஸின் எம்எல்ஏ பதவியை பறிக்க வேண்டும் என்று மிலானி என்பவர் அளித்துள்ள மனு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு அளித்த பதிலில், “ஓபிஎஸ் மீது அதிமுக கொறடாவோ, அதிமுக நிர்வாகிகளோ இதுவரை புகார் அளிக்கவில்லை. தொகுதியை சேர்ந்த ஒருவர் புகார் அளித்துள்ளார். இதுபோன்ற விவகாரத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டம் 10-ன் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து உரிய ஆய்வு செய்து பேரவை விதிப்படியும், சட்டத்தின்படியும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.