சீட்டிங் செய்தாரா அஸ்வின்…? பந்தை சேதப்படுத்தியதாக புகார் – TNPL தொடரில் ஷாக்!

Ball Tampering Allegation On Ravichandran Ashwin: டிஎன்பிஎல் தொடரில் பந்தை சேதப்படுத்தியதாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன், ஓய்வுபெற்ற இந்திய அணி வீரருமான ரவிசந்திரன் அஸ்வின் மீது டிஎன்பிஎல் நிர்வாகத்திடம் மதுரை பேந்தர்ஸ் அணி புகார் அளித்துள்ளது.

டிஎன்பிஎல் என்றழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 9வது சீசன் கடந்த ஜூன் 5ஆம் தேதி தொடங்கியது. கோயம்புத்தூர் நகரில் நடைபெற்ற முதல் கட்ட போட்டிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட போட்டிகள் அனைத்தும் சேலத்தில் நடைபெற்று வருகிறது. அதன்பின் திருநெல்வேலி, திண்டுக்கல் மாவட்டங்களில் அடுத்தடுத்த லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. பிளே ஆப் போட்டிகளும் திண்டுக்கலில் நடைபெற இருக்கின்றன.

Ravichandran Ashwin: மழையால் தாமதமாக தொடங்கிய போட்டி

அந்த வகையில், கடந்த ஜூன் 14ஆம் தேதி சேலத்தில் நடந்த இரவு போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் – மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த மதுரை பேந்தர்ஸ் அணி 151 ரன்களை இலக்காக நிர்ணயிக்க, அதை திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 12.3 ஓவரில் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் திண்டுக்கல் அணியின் பந்துவீச்சில் கணேசன் பெரியசாமி மற்றும் டி சந்திரசேகர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். அஸ்வின் விக்கெட்டை வீழ்த்தவில்லை. திண்டுக்கல் பேட்டிங்கில் சிவம் சிங் 41 பந்துகளில் 8 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களுடன் 86 ரன்களையும், அஸ்வின் 29 பந்துகளில் 6 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களையும் அடித்தனர். இந்த போட்டி மழையால் சற்று தாமதாக தொடங்கியதும் குறிப்பிடத்தக்கது.

Ravichandran Ashwin: அஸ்வின் மீதான குற்றச்சாட்டு என்ன?

இந்த போட்டியில்தான் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டன் ரவிசந்திரன் அஸ்வின், பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பேந்தர்ஸ் அணி புகார் அளித்துள்ளது. இதுகுறித்து மதுரை பேந்தர்ஸ் டிஎன்பிஎல் நிர்வாகத்திடம் அளித்த புகாரில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்தை துடைக்கும் துண்டுகளில், இரசாயனத்தை பயன்படுத்தியதாகவும், இதனால், பந்து வழக்கத்தை விட கனமானதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளது. இதனாலேயே, அந்த பந்து பேட்டில் படும்போதெல்லாம் உலோகத்தின் ஒலியை போன்று சத்தம் எழுந்ததாகவும் குற்றஞ்சாட்டி உள்ளது. 

மதுரை பேந்தர்ஸ் குற்றஞ்சாட்டியிருக்கும் நிலையில், இதற்கான ஆதாரங்களை சமர்பிக்கும்படி டிஎன்பிஎல் நிர்வாகம் கேட்டுள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎல் தொடரின் சிஇஓ பிரசன்ன கண்ணன் ஊடகம் ஒன்றிடம் பேசுகையில், “அவர்கள் (மதுரை பேந்தர்ஸ்) புகார் அளித்துள்ளனர், அதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். ஆட்டம் முடிந்த 24 மணி நேரத்திற்குள் அவர்கள் ஏதேனும் புகார்களை அளிக்க வேண்டும் என்றாலும், நாங்கள் அதை ஏற்றுக்கொண்டு, அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் அளிக்குமாறு அவர்களிடம் கேட்டுள்ளோம். 

Ravichandran Ashwin: ஆதாரத்தை சமர்பிக்காவிட்டால் என்ன ஆகும்?

அவர்களின் குற்றச்சாட்டுகளில் ஏதேனும் உண்மை இருப்பதாகக் கண்டறிந்தால், நாங்கள் ஒரு தனிக் குழுவை அமைப்போம். போதுமான ஆதாரங்கள் இல்லாமல், ஒரு வீரர் மற்றும் மற்றொரு அணிக்கு எதிராக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது தவறு. அவர்கள் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை என்றால், மதுரை பேந்தர்ஸ் அணி நஷ்ட ஈடு போன்ற உரிய நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்” என்றார்.

Ravichandran Ashwin: மதுரை பேந்தர்ஸ் அணி சொல்வது என்ன?

முன்னதாக,  மதுரை பேந்தர்ஸ் அணியின் தலைமை இயக்க அதிகாரி (COO) எஸ்.மகேஷ் டிஎன்பிஎல் நிர்வாகத்திற்கு எழுதிய அந்த கடிதத்தில், “திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான சமீபத்திய போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய சம்பவம் நடந்தது. பலமுறை எச்சரிக்கை விடுத்தபோதும், திண்டுக்கல் அணி இரசாயனங்கள் தடவப்பட்டதாக கூறப்படும் துண்டுகளை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தியது” என குறிப்பிட்டுள்ளார்.

Ravichandran Ashwin: TNPL துண்டுகள்

தற்போது மழைக்காலம் என்பதாலும், இரவில் பனிப்பொழிவு இருப்பதாலும் பந்து வழுக்காமல் இருக்க துண்டுகளை பயன்படுத்தலாம். ஆனால், பந்துகளை நடுவர்களின் முன்னிலையில்தான் வீரர்கள் துடைக்க வேண்டும் என்பது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் கட்டுபாடு விதித்துள்ளது. இதுகுறித்து பிரசன்ன கண்ணன் கூறுகையில், “டிஎன்பிஎல் வழங்கும் துண்டுகளைப் பயன்படுத்தி மட்டுமே அவர்கள் பந்தை உலர்த்த வேண்டும். ஒவ்வொரு முறை பந்து சிக்ஸருக்கு அடிக்கப்படும்போதோ அல்லது ஆட்டமிழந்து ஓவர் பிரேக் ஆன உடனேயோ, நடுவர்கள் தொடர்ந்து பந்தைச் சரிபார்ப்பார்கள், ஆனால் அந்த போட்டியின் போது பந்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றார்.

ஏற்கெனவே, கடந்த ஜூன் 8ஆம் தேதி நடந்த ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் நடுவர்களிடம் வாதிட்டதற்கும், கிளவுஸை தூக்கி எறிந்ததற்கும் 30% அபராதம் செலுத்தினார். தற்போது இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அஸ்வினுக்கு கூடுதல் நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.