India Tour of England: இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி வரும் ஜூன் 20ம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக இங்கிலாந்தின் உள்நாட்டு அணியுடன் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் இந்தியா ஏ அணி விளையாடியது. அதனை தொடர்ந்து இந்தியா ஏ அணிக்கும், இந்திய அணிக்கும் இடையே பயிற்சி ஆட்டம் நடைபெற்றது, இந்த பயிற்சி ஆட்டம் மூன்றாவது நாளில் முடிக்கப்பட்டுள்ளது. காரணம் ஆல் ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் 122 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இந்தியா ஏ அணிக்காக விளையாடிய அவர் பும்ரா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, அர்ஸ்தீப் சிங் ஆகிய சீனியர் பவுலர்களை பந்தாடியுள்ளார்.
இங்கிலாந்து போன்ற நாட்டில் ரன்கள் அடிப்பது மிகவும் சிரமம் என்றாலும் ஷர்துல் தாக்கூர் சிறப்பாக விளையாடி உள்ளார். ஐபிஎல்லில் முதலில் விற்கப்படாமல் போனாலும் பிறகு மாற்று வீரராக லக்னோ அணியில் இடம் பெற்று சிறப்பாக விளையாடினார். அதிலிருந்து பேட்டிங் மற்றும் பௌலிங்கில் தனது திறமையை நிரூபித்துள்ளார், ஒரு நாள் முழுவதும் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கிலும் அசத்தியுள்ளார் தாகூர். கே எல் ராகுல், சுப்மான் கில் மற்றும் கருண் நாயர் ஆகியோரின் விக்கெட்டுகளை பயிற்சி ஆட்டத்தில் எடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஷர்துல் தாக்கூருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா ஏ மற்றும் இந்திய அணிகளுக்கிடையே நடைபெற்ற பயிற்சி ஆட்டம் தொடர்பாக எந்த ஒரு வீடியோவோ அல்லது ஸ்கோர் கார்டோ வெளியிடப்படவில்லை. முதல் நாளில் கேஎல் ராகுல் மற்றும் சுப்மான் கில் அரை சதம் அடித்ததாகவும், சர்பராஸ் கான் 76 பந்துகளில் 106 ரன்கள் அடித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சாய் சுதர்சன் நிதானமாக விளையாடி 38 ரன்கள் அடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஷர்துல் தாக்கூர் அல்லது நிதீஷ்குமார் ரெட்டி ஆகிய இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற கேள்வி இருந்து வந்தது.
pic.twitter.com/VSn1kHozTy
— BCCI (@BCCI) June 15, 2025
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் இடம் பெற்றிருந்த நிதிஷ்குமார் ரன்கள் அடித்தாலும், அவரால் பவுலிங்கில் அவ்வளவு சிறப்பாக அணிக்கு உதவ முடியவில்லை. ஆனால் மறுபுறம் ஷர்துல் தாக்கூர் ரன்கள் மற்றும் விக்கெட் எடுப்பதில் சிறந்தவராக இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ரஞ்சி டிராபி தொடரில் ஷர்துல் தாக்கூர் சிறப்பாக விளையாடியிருந்தார். அதனை தொடர்ந்து தான் தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. எனவே நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதில் ஷர்துல் தாக்கூருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.