சிவகங்கை: அமித் ஷா கட்டுப்பாட்டில்தான் அதிமுக உள்ளது என துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் நடைபெற்ற சார்பு – அணிகள் கூட்டத்தில் உதயநிதி பேசியது: “தேர்தல் நேரங்களில் ஐடி அணியினர் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். திமுகவில் 25 அணிகள் உண்டு. ஆனால் அதிமுகவே 25 அணிகளாக பிரிந்து விட்டது. அக்கட்சி நிர்வாகிகள் பழனிசாமிக்கு கட்டுப்படுவதில்லை. தற்போது அமித் ஷா கட்டுப் பாட்டில் தான் அதிமுக உள்ளது. பாஜக சூழ்ச்சி வலையில் பழனிசாமி மாட்டிக் கொண்டார்.
மும்மொழி கொள்கையை ஏற்காவிட்டால், மத்திய அரசு ரூ.2,500 கோடி தர முடியாது என்றது. முதல்வர் தேவையில்லை என்றார். தொகுதிகள் மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு 8 தொகுதிகள் குறையும். இந்தியாவிலேயே தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக முதன்முதலில் குரல் கொடுத்தவர் ஸ்டாலின். ஊழலால் தண்டிக்கப்பட்ட கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு திமுகவை ஊழல் கட்சி என்று அமித் ஷா கூறுகிறார். பாஜக ஊழல் பட்டியலை வெளியிட்டால் நீண்டு கொண்டே போகும். ஜெயலலிதா மறைந்த பின்னர் தமிழக உரிமையை பாஜகவிடம் அதிமுக அடகு வைத்துவிட்டது” என்று அவர் பேசினார்.
தொடர்ந்து அவர் செம்மொழி பூங்காவில் பெண்களுக்கான மாநில அளவிலான கையுந்து போட்டியை தொடங்கி வைத்தார். முன்னதாக சிவகங்கையில் இருந்து திருப்பத்தூர் சென்றபோது, சோழபுரத்தில் உதயநிதி வாகனத்தை மறித்து, 20 குடும்பத்தினர் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வேண்டுமென முறையிட்டனர்.