இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: இந்திய அணியுடன் கம்பீர் இணைவது எப்போது..?

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது.

சமீபத்தில் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், புதிய கேப்டனாக 25 வயதான சுப்மன் கில் நியமிக்கப்பட்டு இருக்கிறார். கேப்டன்ஷிப்பில் போதிய அனுபவம் இல்லாத அவரது தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் எப்படி விளையாடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

அத்துடன் இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் பொருட்டு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் மேற்பார்வையில் இந்திய அணியினர் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த தொடருக்கான இந்திய அணியுடன் இங்கிலாந்து பயணித்த தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் கடந்த 13-ம் தேதி அவசர அவசரமாக நாடு திரும்பினார். அவரது தாயார் சீமாவுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை அருகில் இருந்து கவனித்து கொள்ளவே கம்பீர் டெல்லி திரும்பியிருப்பது தெரிய வந்துள்ளது.

ஆனால் மீண்டும் இங்கிலாந்துக்கு எப்போது செல்வார் என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் கம்பீருடைய தாயாரின் உடல்நிலை சீரானதை தொடர்ந்து அவர் நாளை மீண்டும் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்று இந்திய அணியுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.