இஸ்ரேல் தொடர் தாக்குதலால் டெஹ்ரானில் அணுக்கதிர் வீச்சு அபாயம்: ஈரானின் புதிய ராணுவ தளபதி உயிரிழப்பு – பின்னணி என்ன?

டெஹ்ரான்: இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஈரானின் புதிய ராணுவத் தளபதி அலி ஷத்மானி உயிரிழந்தார்.

அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் தீவிரம் காட்டி வரும் நிலையில், அந்நாட்டின் மீது இஸ்ரேல் விமானப்படை கடந்த 13-ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், ஈரான் ராணுவத் தளபதி முகமது பகேரி, ஐஆர்ஜிசி படை தளபதி உசைன் சலாமி, ஈரான் போர் கட்டளை தலைமையக தளபதி கோலாம் அலி ரஷீத் ஆகியோர் உயிரிழந்தனர். தொடர்ந்து, ஈரானின் புதிய தளபதியாக அலி ஷத்மானி நியமிக்கப்பட்டார். இவர் ஐஆர்ஜிசி படை, போர் கட்டளை தலைமையக தளபதி பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில், இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் நள்ளிர
வில் டெஹ்ரானில் உள்ள ரகசிய இடத்தை குறிவைத்து தாக்கின. இதில் புதிய ராணுவத் தளபதி அலி ஷத்மானி உயிரிழந்தார்.

இஸ்ரேல்-ஈரான் போர் நேற்று 5-வது நாளாக நீடித்தது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ராணுவ முகாம்கள், எண்ணெய் வயல்கள், மின்விநியோக கட்டமைப்புகள், குடிநீர் விநியோக கட்டமைப்புகளை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள், ட்ரோன்கள் அதிதீவிர தாக்குதலை நடத்தின.ஈரானின் மத்திய வங்கி மற்றும் பிரதான வங்கிகளைக் குறிவைத்து இஸ்ரேலின் மொசாட் உளவுப் பிரிவு இணைய தாக்குதலை நடத்தியது. இதனால் ஈரானின் வங்கித்
துறை முழுமையாக முடங்கியுள்ளது. ஈரானில் இதுவரை 224 பேர் உயிரிழந்துள்ளனர். 2,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

ஈரான் ராணுவத்திடம் 20,000-க்கும் மேற்பட்ட அதிநவீன ஏவுகணைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்நாட்டு ராணுவம், இஸ்ரேலை குறிவைத்து தினமும் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி வருகிறது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ராணுவ தலைமையகம் மற்றும் மொசாட் உளவுப் பிரிவின் தலைமை அலுவலகம் ஆகியவை செயல்படுகின்றன. இரு அலுவலகங்களையும் குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று ஏவுகணைகளை வீசியது. இதில் மொசாட் அலுவலகத்தின் மீது சில ஏவுகணைகள் விழுந்தன. அந்த வளாகம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் கூறும்போது, “எங்களது வான் பாதுகாப்பு கவசங்கள் மிகவும் வலுவாக உள்ளன. ஈரான் ராணுவம் வீசும் ஏவுகணைகளில் 90 சதவீதத்தை நடுவானில் இடைமறித்து அழித்து விடுகிறோம். எனினும் 10 சதவீத ஏவுகணைகள் இஸ்ரேலில் விழுகின்றன. பொதுமக்கள் அனைவரும் பதுங்கு அறைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் பெரிய அளவில் உயிரிழப்பு ஏற்படவில்லை. இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். 600 பேர் காயமடைந்துள் ளனர்” என்று தெரிவித்தன.

கனடாவின் ஆல்பர்டா மகாணம், கனனாஸ்கிஸ் பகுதியில் கடந்த 15-ம் தேதி ஜி7 அமைப்பின் உச்சி மாநாடு தொடங்கியது. இதில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா, ஜப்பான் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். ஜி7 உச்சி மாநாட்டின்போது இஸ்ரேல், ஈரான் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தில் கையெழுத்திட அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மறுத்துவிட்டார். மேலும், மாநாட்டை பாதியில் முடித்துக் கொண்டு அவர் அமெரிக்காவுக்கு திரும்பிவிட்டார்.

சமூக வலைதளத்தில் அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், “அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டிருக்க வேண்டும். அந்த நாடு அணு ஆயுதங்களை வைத்திருக்கக்கூடாது என்று பலமுறை கூறினேன். ஆனால், ஈரானின் பிடிவாதத்தால் மனித உயிர்களை இழந்து வருகிறோம். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வசிக்கும் மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு திரும்பும்போது விமானத்தில் அதிபர் ட்ரம்ப் அளித்த பேட்டியில் கூறியதாவது: இஸ்ரேல், ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தினால், அந்த நாடு பேரழிவை சந்திக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

டெஹ்ரானில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்திருப்பதால், ஈரான் முழுவதும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.ஈரான் மீது அமெரிக்கா மிகப்பெரிய தாக்குதலை நடத்தக்கூடும் என்ற அச்சத்தால் டெஹ்ரானில் வசிக்கும் மக்கள் வாகனங்களில் வெளியேறி வருகின்றனர். இதனால் டெஹ்ரான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு முதல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.

அணுக்கதிர் வீச்சு அபாயம்: உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானான் கேப்ரியாசஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் கவலையளிக்கின்றன. இதனால் ஈரான் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் உடல் நலம் மிக மோசமாக பாதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச அணுசக்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “ஈரானின் நடான்சு அணுசக்தி தளம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனினும், அந்த நாட்டின் போர்டோ, இஸ்பஹான் அணுசக்தி தளங்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் நடான்சு பகுதிகளில் அணுக்கதிர் வீச்சு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த நாட்டின் மூத்த அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் குடும்பத்துடன் ஈரானின் பாதுகாப்பான பகுதிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க போர் கப்பல்: அமெரிக்க கடற்படையின் விமானந்தாங்கி போர்க் கப்பலான நிமிட்ஸ், தென்சீனக் கடலில் முகாமிட்டு இருந்தது. அணு சக்தியில் இயங்கும் இந்த போர்க்கப்பல் மத்திய கிழக்கு பகுதிக்கு விரைந்து செல்கிறது. நிமிட்ஸ் போர்க் கப்பலில் 5,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர். 60-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.

ஈரானில் 21 அணுசக்தி தளங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான அணுசக்தி தளங்களை இஸ்ரேல் விமானப் படை ஏற்கெனவே அழித்துவிட்டது. ஈரானின் போர்டோ நகரில் மலைக்கு அடியில் மிகப்பெரிய அணுசக்தி தளம் செயல்படுகிறது. சுமார் 90 மீட்டர் ஆழத்தில் உள்ள இந்த அணுசக்தி தளம் ஈரானின் அணு சக்தி கோட்டை என்று அழைக்கப்படுகிறது.

அமெரிக்க ராணுவத்தின் பூமியை துளைக்கும் ஜிபியு-57ஏ ரக வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினால் மட்டுமே போர்டோ அணு சக்தி தளத்தை அழிக்க முடியும். இதுதொடர்பாக அதிபர் ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.