டெல் அவிவ்,
தங்களுக்கு எதிராக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக கூறி ஈரான் மீது கடந்த 13-ந்தேதி திடீரென இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் அதை சுற்றியுள்ள ராணுவ நிலைகள் மற்றும் முக்கியமான அணு ஆயுத கட்டமைப்புகளை குறி வைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசியது.
இஸ்ரேலின் இந்த பயங்கர தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதிகள், அணு ஆயுத விஞ்ஞானிகள் என பாதுகாப்பு நிபுணர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் ராணுவ தளவாடங்களும் மிகப்பெரும் சேதமடைந்தன. மேலும் டெஹ்ரானில் உள்ள இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் கிடங்கையும் தாக்கியது. இந்த எண்ணெய் கிடங்கு தொடர்ந்து பற்றி எரிகிறது. இதனால் ஈரானில் பரவலாக பெருத்த சேதம் விளைந்துள்ளது.
இதற்கிடையே இஸ்ரேல் மீது ஈரானும் பதிலடி தாக்குதலை தொடங்கியது. ஜெருசலேம், டெல் அவிவ் உள்ளிட்ட இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறி வைத்து ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை கொண்டு தாக்கி வருகிறது.
இதில் பலவற்றை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து தாக்கி அழித்த நிலையில், அதையும் தாண்டி சில ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் தங்கள் இலக்கை தாக்கின.
4-வது நாளாக தொடர்ந்த மோதல்
இரு நாடுகளுக்கு இடையேயான இந்த மோதல் நேற்று 4-வது நாளாக நீடித்தது. இஸ்ரேலின் போர் விமானங்கள் ஈரானுக்குள் நூற்றுக்கணக்கான கி.மீ. தூரத்துக்கு உள்ளே வந்து தாக்குதலை நடத்தி வருகின்றன.
குறிப்பாக ஈரானின் மேற்கு பகுதியில் இருந்து தலைநகர் டெஹ்ரான் வரை ஈரானின் வான் பகுதியை தங்கள் போர் விமானங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும், எந்தவித தடையும் இன்றி தாக்குதல் தொடுத்து வருவதாகவும் இஸ்ரேல் கூறியது.
இந்த தாக்குதலில் ஈரானின் 120 ஏவுகணை லாஞ்சர்கள் அழிக்கப்பட்டதாகவும், அவற்றின் மூலம்தான் கடந்த 3 நாட்களாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் எப்பி டெப்ரின் கூறியுள்ளார். மேலும் டெஹ்ரானில் உள்ள ஈரான் புரட்சிகர படையின் 10 கட்டளை மையங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
வெற்றியின் பாதையில் இருக்கிறோம் – பெஞ்சமின் நேட்டன்யாகு
இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு கூறுகையில், ‘டெஹ்ரான் வான்பகுதியை எங்கள் விமானப்படை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அணு ஆயுத அச்சுறுத்தலை நீக்குதல் மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை நீக்குதல் ஆகிய இரண்டு குறிக்கோள்களை அடைவதற்கான பாதையில் நாங்கள் இருக்கிறோம்’ என கூறினார்.
மேலும் அவர், ‘நாங்கள் வெற்றியின் பாதையில் இருக்கிறோம். அந்த இலக்கு எட்டப்படுகிறது. அற்புதமான பணிகளைச் செய்யும் எங்கள் வீர விமானிகள் மற்றும் எங்கள் அற்புதமான தரைப்படை குழுவினருக்கு நன்றி’ என்றும் தெரிவித்தார்.
அதிகரிக்கும் உயிரிழப் பு
ஈரானில் கடந்த 13-ந்தேதி முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 224 பேர் கொல்லப்பட்டதாகவும், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. அதேநேரம் பலி எண்ணிக்கை 400-க்கு மேல் உயர்ந்திருப்பதாகவும், 600-க்கு மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் மனித உரிமை ஆர்வலர்கள் ஏற்கனவே கூறியிருந்தனர்.
மறுபுறம் இஸ்ரேல் மீது நேற்றும் ஈரான் அலையலையாக டிரோன்களையும் 100-க்கு மேற்பட்ட ஏவுகணைகளையும் வீசியது. இதில் பெரும்பாலும் அடுக்குமாடி கட்டிடங்கள் சேதமடைந்தன. இதில் 8 பேர் பலியாகினர். டெல் அவிவ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே ஈரானின் ஏவுகணை ஒன்று விழுந்து வெடித்தது. இதில் தூதரகம் லேசான சேதமடைந்தது. எனினும் யாரும் காயமடையவில்லை.
இஸ்ரேல் மீது ஈரான் நடத்தி வரும் பதில் தாக்குதலில் இதுவரை 24 பேர் கொல்லப்பட்டதாகவும், 500-க்கு அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது நேற்று தீவிர தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், முந்தையவற்றை விட மிகவும் வலிமையானது, கடுமையானது, துல்லியமானது மற்றும் அழிவுகரமானதாக இருந்ததாக ஈரான் கூறியுள்ளது. மறுபுறம் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் வசித்து வரும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்து உள்ளது. இதன் மூலம் அங்கே தீவிர தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் மண்ணில் வரலாற்றில் மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது. இரு நாடுகளும் நான்காவது நாளாக பெரும் தாக்குதல்களை பரிமாறிக் கொண்ட நிலையில், இஸ்ரேலை நோக்கி புதிய ஏவுகணை தாக்குதல்கள் நடத்த உள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் நேற்று இரவு அறிவித்துள்ளன.
மேலும் இஸ்ரேல் மண்ணில் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் தீவிரமான ஏவுகணைத் தாக்குதலுக்கு ஈரான் தயாராகி வருவதாகவும் ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.