இஸ்ரேல் Vs ஈரான் தீவிரம்: போர் நிறுத்தத்தை விட ‘மேலானதை’ நோக்கும் ட்ரம்ப் சொல்வது என்ன?

வாஷிங்டன்: இஸ்ரேல் – ஈரான் மோதல் ஐந்தாவது நாளை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, “நாங்கள் போர் நிறுத்தத்தை விட சிறந்ததை எதிர்நோக்குகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஏர் ஃபோர்ஸ் ஒன்னில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாங்கள் போர் நிறுத்தத்தை விட சிறந்த ஒன்றை எதிர்நோக்குகிறோம்” என்று கூறினார். அதற்கு, போர் நிறுத்தத்தை விட சிறந்தது எது என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ​”உண்மையான முடிவு. போர் நிறுத்தம் அல்ல. முடிவு” என்று தெளிவுபடுத்தினார். ஈரான் – இஸ்ரேல் மோதலில் அமெரிக்காவின் நிலைப்பாடு மற்றும் இஸ்ரேலுக்கு வழங்கப்பட்ட உதவி குறித்து பேசிய ட்ரம்ப், “இப்போது, ​​நாங்கள் நல்ல நிலையில் இருக்கிறோம். நினைவில் கொள்ளுங்கள், ஈரானிடம் அணு ஆயுதம் இருக்க முடியாது” என்றார்.

மேலும், ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில், ‘எந்த வகையிலும் அல்லது வடிவத்திலும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் குறித்து ஈரானை அணுகவில்லை’ என்று பதிவிட்டுள்ளார். மேலும், ‘இது மிகவும் புனையப்பட்ட போலிச் செய்தி. அவர்கள் பேச விரும்பினால், என்னை எப்படித் தொடர்புகொள்வது என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் மேசையில் இருந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும் – அது நிறைய உயிர்களைக் காப்பாற்றியிருக்கும்!’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் அல்லது மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப் முதலான மூத்த அமெரிக்க அதிகாரிகளை ஈரானுடன் ராஜதந்திர ரீதியாக ஈடுபட அனுப்பலாம் என்ற தகவல்களும் வெளியானது.

முன்னதாக, ஜி7 உச்சி மாநாட்டிலிருந்து முன்கூட்டியே வெளியேறிய போதிலும், போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ட்ரம்ப் மறுத்தார். அமெரிக்கா போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் கருத்துக்கு பதிலளித்த ட்ரம்ப், “தவறு! நான் இப்போது வாஷிங்டனுக்குச் செல்வதற்கான காரணம் அவருக்குத் தெரியாது. ஆனால், அதற்கும் நிச்சயமாக போர் நிறுத்தத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் எதிர்பார்ப்பது அதை விட மிகப் பெரியது” என்று தெரிவித்தார்.

இந்தச் சூழலில் ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தனது எக்ஸ் பக்கத்தில், “ட்ரம்ப் ராஜதந்திரத்தில் உண்மையாக இருந்தால், இந்தப் போரை நிறுத்த ஆர்வமாக இருந்தால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் இதன் விளைவாகும். இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும். இஸ்ரேல் எங்களுக்கு எதிரான ராணுவ ஆக்கிரமிப்பை முற்றிலுமாக நிறுத்தாவிட்டால், எங்கள் பதிலடிகள் தொடரும்” என்று கூறினார்.

இதற்கிடையில், சீனா தனது குடிமக்களை இஸ்ரேலை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் வான்வெளி மூடப்பட்டிருப்பதால் பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைவதைக் காரணம் காட்டி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.