டெஹ்ரான் [ஈரான்],
இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் நேற்று இரவு ஒரு கட்டிடத்திலிருந்து புகை கிளம்பும் புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டது, மேலும் அதன் அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சி கட்டிடம் தாக்கப்பட்டதாகவும், இதன் விளைவாக ஏராளமான ஈரானிய பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதள பதிவில் விவரங்களைப் பகிர்ந்து கொண்ட ஈரான் தூதரகம், இஸ்ரேலின் “குற்றச் செயல்” அனைத்து சர்வதேச விதிமுறைகளையும் மீறுவதாக கூறி உள்ளது.
மேலும் தனது பதிவில், “சில நிமிடங்களுக்கு முன்பு, ஒரு மிருகத்தனமான தாக்குதலில், குற்றவியல் சியோனிஸ்ட் ஆட்சி ஈரானின் அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சி (IRIB) கட்டிடத்தை குறிவைத்து, ஏராளமான ஈரானிய பத்திரிகையாளர்களைக் கொன்று குவித்துள்ளது. அனைத்து சர்வதேச விதிமுறைகளையும் தெளிவாக மீறும் இந்த குற்றச் செயலை இந்தியாவில் உள்ள சுயாதீன ஊடகங்கள் கண்டிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.