''ஈரான் ராணுவத் தளபதி அலி ஷத்மானி கொல்லப்பட்டார்'' – இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

டெல் அவிவ்: தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஈரானிய உச்சத் தலைவர் அலி கமேனிக்கு மிக நெருக்கமானவருமான அலி ஷத்மானியைக் கொன்றதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஈரானில் புதிதாக நியமிக்கப்பட்ட உயர் ராணுவ தளபதி அலி ஷத்மானியை கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அறிவித்தன. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஆட்சியின் உயர் ராணுவத் தளபதியுமான அலி ஷத்மானி, துல்லியமான உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து, மத்திய தெஹ்ரானில் ஐஏஎஃப் தாக்குதலில் கொல்லப்பட்டார்” என்று ஐடிஎஃப் ட்வீட் செய்தது.

ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதி அலி ஷத்மானி ஈரானிய ஆயுதப் படைகளின் அவசரகால கட்டளைத் தளபதியாகப் பணியாற்றினார். அவர் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) மற்றும் ஈரானிய ராணுவம் இரண்டிற்கும் கட்டளை தளபதியாக இருந்தார்.

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் ஐந்தாவது நாளாக தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) ஈரானில் இருந்து ஏவப்பட்ட புதிய ஏவுகணைகளைக் கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது.

ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களின் விளைவாக ஈரான் மற்றும் இஸ்ரேலில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரானில், இதுவரை 224 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 1,200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலில், ஈரானின் பதிலடி தாக்குதல்களில் இதுவரை 24 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 592 பேர் காயமடைந்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.