பெங்களூரு: கர்நாடகாவில் மீண்டும் புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடகாவில் கடந்த 2015-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் சார்பில் ரூ.162 கோடி செலவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில் மக்களின் சமூக, பொருளாதார, கல்வி குறித்த விவரங்கள் திரட்டப்பட்டன. அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதனை ஏற்றதாக அரசாணை வெளியிடப்பட்டது. அதற்கு ஒக்கலிகா, லிங்காயத்து போன்ற சாதிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிற்படுத்தப்பட்டோர் ஆணைய சட்ட பிரிவு 11 (1)ன்படி ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அந்த கணக்கெடுப்பு இப்போது காலாவதியாகிவிட்டது. அந்த அறிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள சில சாதியினர் புதிதாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரினர். அதனை ஏற்று மீண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த புதிதாக உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினேன். அவர்களின் வழிகாட்டுதலின்படி சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள இருக்கிறோம். எங்களின் தரவுகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்பதே கர்நாடக அரசின் நிலைப்பாடு. புதிதாக இந்த கணக்கெடுப்பை மேற்கொள்ள 80 நாட்கள் வரை ஆகும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு சித்தராமையா தெரிவித்தார்.