சண்டிகர்: ஹரியானாவில் கடந்த 14-ம் தேதி முதல் காணாமல்போன மாடல் அழகி ஷீத்தல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஹரியானா நாட்டுப்புற இசைத் துறையுடன் தொடர்புடைய மாடல் அழகி ஷீத்தல் என்கிற சிம்மி சவுத்ரி (23). இவரை கடந்த 14-ம் தேதி முதல் காணவில்லை என்று அவரது சகோதரி நேகா கடந்த ஞாயிற்றுக்கிழமை பானிபட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப்போது நேகா, “14-ம் தேதி இரவு ஷீத்தல் என்னை தொலைபேசியில் அழைத்து, பானிபட்டை சேர்ந்த சுனில் என்ற முன்னாள் நண்பர் படப்பிடிப்பு தளத்தில் வந்து தன்னை தாக்கியதாக கூறினாள்” என்றார்.
இந்நிலையில் சோனிபட் நகரின் கார்கவுடா பகுதி கால்வாய் ஒன்றில் ஷீத்தல் கழுத்து அறுக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹரியானா போலீஸார் நேற்று தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கால்வாயில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினோம். இதில் காணாமல்போன ஷீத்தலின் உடல் அது எனத் தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று கூறப்பட்டுள்ளது. ஷீத்தல் மாடலிங் துறைக்கு வரும் முன் கர்னாலில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றி வந்தார்.