லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘கூலி’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவிருக்கிறது. ஆதலால், தற்போது ‘கூலி’ படத்தின் இறுதிகட்டப் பணிகளில் பிஸியாக இயங்கி வருகிறார் லோகேஷ்.
படத்தில் ரஜினியுடன் நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

‘கூலி’ படத்தில் கேமியோ செய்திருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ஆமீர் கான் பகிர்ந்திருந்தார். அதைத் தொடர்ந்து, ‘குபேரா’ படத்திற்காக நாகார்ஜுனா ‘தி ஹாலிவுட் ரிப்போர்டர்’ ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்கு அளித்த பேட்டியில், ‘கூலி’ படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
அந்தப் பேட்டியில் நாகார்ஜுனா பேசுகையில், “லோகேஷ் கனகராஜ் ‘கூலி’ படத்திற்காக என்னிடம் வந்ததற்கான காரணம் தெரியவில்லை.
ஆனால், அவர், ‘வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உங்களுக்கு ஆட்சேபணை இருக்கிறதா? அப்படி இருந்தால், நாம் பேசிவிட்டு ஒரு கப் டீ குடித்துவிட்டு நான் கிளம்பிவிடுகிறேன்,’ என்றார்.
நான் அவரிடம், ‘நான் அதற்கு எதிராக இல்லை. ஆனால், முதலில் கதையைக் கேட்க வேண்டும்,’ என்றேன். கதை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனால், அவரை ஆறு முதல் ஏழு முறை மீண்டும் வரவழைத்து, என் கதாபாத்திரத்தைப் பற்றி பல விஷயங்களைப் பேசினேன்.

இப்போது யாராவது ‘கூலி’ படத்தில் என் கதாபாத்திரம் எப்படி இருந்தது என்று கேட்டால், ஒரு வார்த்தையில் ‘சுதந்திரம்’ எனப் பதிலளிப்பேன். படத்தில் நடிக்கும்போது எனக்கு எந்த அழுத்தமும் இல்லை.
‘குபேரா’ படத்தில் தீபக் கதாபாத்திரம் எப்போதும் ஒரு குறிப்பிட்ட விதத்தில் இருக்க வேண்டும். ஒரு கப் காபி குடிக்கும் விதத்தில்கூட கவனமாக இருக்க வேண்டும். ஆனால், ‘கூலி’ படத்தில் அப்படி கிடையாது. ‘கூலி’ திரைப்படம் எனக்கு விடுதலை அனுபவமாக இருந்தது,” என்று கூறினார்.