தெஹ்ரான்: “ஈரானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் அமெரிக்கா உடந்தையாக உள்ளது. அமெரிக்கா ‘சிவப்பு கோட்டை’ தாண்டினால் ஈரான் தக்க பதிலடி கொடுக்கும்” என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் தூதர் எச்சரித்துள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானிய தூதர் அலி பஹ்ரைனி, “இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் அமெரிக்கா உடந்தையாக உள்ளது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எந்த நேரத்திலும், ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ளது என்ற முடிவுக்கு வந்தால், நாங்கள் அமெரிக்காவுக்கு பதிலளிக்கத் தொடங்குவோம். ட்ரம்ப்பின் முற்றிலும் தேவையற்ற மற்றும் விரோதமான கருத்துகள் குறித்து ஈரான் விழிப்புடன் இருக்கிறது. ஒரு கோடு உள்ளது, அதை தாண்டினால், எங்கள் தரப்பில் பதிலளிப்போம். அமெரிக்கா சிவப்புக் கோட்டை தாண்டியவுடன், எங்களின் பதில் வரும்” என்று கூறினார்.
மேலும், “இஸ்ரேல் அல்லது அமெரிக்கா என யாராக இருந்தாலும் நாங்கள் வலுவாக பதிலடி கொடுப்போம். எந்தப் பக்கத்திலிருந்தும் ஆக்கிரமிப்பை நிறுத்துவோம். நாங்கள் அமெரிக்காவுக்கு இப்போது ஒரு செய்தியை வழங்கியுள்ளோம். எனவே நாங்கள் மிகவும் உறுதியாக பதிலளிப்போம்.
அதேபோல இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலளிப்பதில் உறுதியாக உள்ளோம். நாங்கள் மிகவும் தீவிரமாகவும் வலுவாகவும் பதிலளிப்போம். அதைத்தான் இப்போது செய்கிறோம். இதில் ஈரான் எந்தவிதமான கட்டுப்பாட்டையும் காட்டும் என்று யாரும் எதிர்பார்க்கக்கூடாது. அமெரிக்கா எங்கள் மீதான தாக்குதல்களையும் ஆக்கிரமிப்பையும் கண்டிக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், ஆக்கிரமிப்பை நியாயப்படுத்தவும் முயற்சிக்கிறார்கள்” என்று அவர் கூறினார்.
ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவது குறித்து கேள்விக்கு பதிலளித்த அவர், “எங்களை தற்காத்துக் கொள்வதைத் தவிர வேறு எந்தச் சூழ்நிலையையும் ஈரான் இப்போதைக்கு யோசிக்கவில்லை” என்று அவர் கூறினார்.
முன்னதாக, அணு ஆயுத தயாரிப்பை ஈரான் தீவிரப்படுத்துவதாக கூறி, அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த 13-ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரானும் பதிலடி தாக்குதலில் இறங்கியது. இரு தரப்பும் 6-வது நாளாக இன்றும் பரஸ்பரம் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.