இஸ்ரேல் ஈரான் மோதல்: போர் பதற்றத்தை தணிக்க வேண்டும்; ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டறிக்கை

ஒட்டாவா,

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 என்ற அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த உச்சி மாநாட்டில் பிற நாடுகள், சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை விருந்தினர்களாக அழைப்பது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணம் கனனாஸ்கிஸ் நகரில் கடந்த 16 மற்றும் 17-ந் தேதிகளில் (உள்ளூர் நேரப்படி) நடந்தது. கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பின்பேரில் அதில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில், ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கையெழுத்திட்ட கூட்டறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில், “மத்திய கிழக்கில் அமைதியும், நிலைத்தன்மையும் நிலவ ஜி-7 நாடுகளின் தலைவர்கள் உறுதி பூண்டுள்ளோம். இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். இஸ்ரேல் பாதுகாப்புக்கு ஆதரவு அளிக்கிறோம்.

பொதுமக்கள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறோம். அதே நேரத்தில், பிராந்திய நிலையற்ற தன்மைக்கும், பயங்கரவாதத்துக்கும் ஈரான்தான் மூலகாரணமாக இருக்கிறது. எனவே, ஈரான் கையில் அணுகுண்டு போகக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.

இஸ்ரேல்-ஈரான் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும். ஈரான் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டால், காசா உள்பட மத்திய கிழக்கில் பதற்றம் தணியும். சர்வதேச எரிபொருள் சந்தைகளில் ஏற்படும் தாக்கத்தை தொடர்ந்து கண்காணிப்போம். சந்தை நிலைத்தன்மையை பாதுகாக்க ஒருமித்த கருத்துடைய நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவோம்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி

இதற்கிடையே, கனடா நேரப்படி, நேற்று முன்தினம் மாலையில், பிரதமர் மோடி கனடாவின் கல்காரி நகரை சென்றடைந்தார். இதுகுறித்து அவர் தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில், “ஜி-நாடுகள் மாநாட்டில் பங்கேற்க கனடா நாட்டின் கல்காரி வந்தடைந்தேன். மாநாட்டில் பல்வேறு தலைவர்களை சந்திப்பேன். முக்கியமான உலக பிரச்சினைகள் குறித்த எனது சிந்தனைகளை பகிர்ந்து கொள்வேன். தெற்குலக நாடுகளின் முன்னுரிமை பிரச்சினைகளை வலியுறுத்துவேன்” என்று பதிவிட்டிருந்தார்.

தனது மற்றொரு பதிவில், “உலகளாவிய முன்னேற்றத்திற்காக ஒன்றிணைவோம்! முக்கிய உலகளாவிய சவால்கள் மற்றும் சிறந்த கிரகத்திற்கான பகிரப்பட்ட அபிலாஷைகள் குறித்து ஜி7 தலைவர்களுடன் ஆக்கப்பூர்வமான பரிமாற்றங்கள் நடைபெற்றன” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பிரதமர் மோடி, 2015-ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் கனடா சென்றுள்ளார். ஜி-7 நாடுகள் மாநாட்டுக்கு இடையே அவர் பல்வேறு தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகியவை குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே, ஜி-7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பாதியிலேயே அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்தம் செய்வதில் கவனம் செலுத்த அமெரிக்கா திரும்பியதாக வெளியான செய்தியை அவர் மறுத்தார். ”ஈரான் அணுகுண்டு வைத்திருக்கக்கூடாது” என்றும் அவர் கூறினார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள மக்கள் வெளியேற வேண்டும் என்று டிரம்ப் கேட்டுக்கொண்டார். அதன்படி, நேற்று அங்குள்ள மக்கள் வெளியேற தொடங்கினர்.

டொனால்டு டிரம்ப்

இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் இணையதளப் பக்கத்தில், “ஈரானின் “உச்ச தலைவர்” என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் ஒரு எளிதான இலக்கு, ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை வெளியே கொண்டுவரப் போவதில்லை (கொல்லப் போவதில்லை!), குறைந்தபட்சம் இப்போதைக்கு அது நடக்காது. ஆனால் பொதுமக்கள் மற்றும் அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி!

ஈரானின் வான்வெளி எங்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்கள் வந்துள்ளது. ஈரானிடம் நல்ல ஸ்கை டிராக்கர்கள் மற்றும் பிற தற்காப்பு உபகரணங்கள் ஏராளமாக இருந்தன, ஆனால் அது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, “பொருட்களுடன்” ஒப்பிட முடியாது. அமெரிக்க தயாரிப்பு ஆயுதங்களைவிட ஈரானின் ஆயுதங்கள் சிறப்பாக செயல்படவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.