கூட்டணி ஆட்சி தொடர்பான அமித் ஷா பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது: ராம சீனிவாசன் கருத்து

மதுரை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசவில்லை. அவரது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று பாஜக பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கூறினார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் மாமன்னர் மருது பாண்டியர்களின் ஜம்பு தீவு பிரகடன நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ராம சீனிவாசன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சென்னையில் சிறுவன் கடத்தல் வழக்கில் ஏடிஜிபி கைது செய்யப்பட்டது அபாயகரமானது. காவல் துறை உயரதிகாரிகள் கைது செய்யப்படுவதை தீவிரமாக கருத வேண்டும். காவல் துறை உயர் அதிகாரியே கடத்தலுக்கு துணை போவதை ஏற்க முடியாது.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தாமிரத்தின் விலை அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சி பாதிக்கபட்டுள்ளது. எனவே, அந்த ஆலையை மீண்டும் திறக்கக் கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், சீனாவில் இருந்து தாமிரத்தை அதிக விலைக்கு வாங்கும் நிலை ஏற்படும். தமிழகத்தில் எந்த திட்டங்களை கொண்டு வந்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

கீழடி நாகரிக வரலாற்றை மத்திய அரசு மறைக்கப் பார்க்கிறது என தொடர்ந்து குற்றம் சாட்டுகின்றனர். கீழடி நாகரிகம் குறித்து இன்னும் அறிவியல் ஆய்வுகள் செய்யப்பட வேண்டியுள்ளதால், ஆய்வுக்குப் பிறகு கீழடி நாகரிகம் குறித்து தகவல் வெளியிடப்படும். திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்தின்போது தமிழில் மந்திரம் ஓத வேண்டும் என்ற கோரிக்கையை வரவேற்கிறோம்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி ஆட்சி நடைபெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்றுதான் அவர் கூறியுள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களிலும், மற்ற கூட்டணிக் கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது என்றுதான் சொல்வோமே தவிர, பாஜக ஆட்சி, அதிமுக ஆட்சி என்று சொல்லப் போவதில்லை.

இந்தியா முழுவதுமே தேசிய ஜனநாயக கூட்டணி என்று சொல்லித்தான் எங்களுக்குப் பழக்கம். அதையேதான் அமித்ஷாவும் கூறியுள்ளார். தமிழகத்தில் 2026-ல் அதிமுக பெரும்பான்மையுன் ஆட்சி அமைத்தாலும், அதை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி என்றுதான் சொல்வோம். அமித்ஷா எந்த இடத்திலும் கூட்டணி ஆட்சி என்று சொல்லவில்லை தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி என்றுதான் கூறியுள்ளார். இவ்வாறு ராம சீனிவாசன் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.