அல்பாட்டா: கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பிரதமர் நரேந்திர மோடி, 3 நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு கடந்த 15-ம் தேதி சென்றார். இதைத் தொடர்ந்து அங்கிருந்து திங்கள்கிழமை மாலை புறப்பட்டார். இந்நிலையில், நேற்று காலை கனடாவுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார்.
கனடாவின் அல்பாட்டா நகரிலுள்ள கால்கரி விமான நிலையத்தில் அந்நாட்டு அரசுத் தரப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கனடா நாட்டின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதைத் தொடர்ந்து அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியைச் சந்தித்தனர்.
கனடாவிலுள்ள பத்திரிகையாளர் ஹலீமா சாடியா கூறும்போது, “கனடாவில் 15 லட்சம் இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர். கடந்த 2 வருடங்களாக இந்தியா, கனடா உறவு மோசமாக இருப்பது இந்திய வம்சாவளியினரிடையே மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தது” என்றார்.
கனடாவிலுள்ள இந்து அமைப்பின் தலைவர் விஷால் சைனி கூறும்போது, “பிரதமர் மோடியை வரவேற்கிறோம். இந்தியா, கனடாவின் பொருளாதார வளர்ச்சிக்காக 15 லட்சம் இந்திய வம்சாவளியினர் முக்கிய பங்களிக்கின்றனர்” என்றார். மாலையில் கனனாஸ்கிஸ் பகுதியில் ‘ஜி7’ உச்சி மாநாடு தொடங்கியது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். மாநாட்டில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டையொட்டி பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை பிரதமர் மோடி நடத்துவார் எனத் தெரியவந்துள்ளது. மாநாட்டில் பங்கேற்று முடித்த பின்னர் இன்று(ஜூன் 18) குரேஷியாவுக்கு பிரதமர் மோடி செல்லவுள்ளார். அங்கு அந்நாட்டின் அதிபர் ஸோரன் மிலனோவிச், பிரதமர் ஆன்ட்ரேஜ் பிலென்கோவிச் ஆகியோரை அவர் சந்தித்துப் பேசவுள்ளார்.