டாஸ்மாக் வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்கு எதிரான ஆவணங்களை தாக்கல் செய்ய கோர்ட் உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரனுக்கு எதிரான ஆவணங்களை இன்று தாக்கல் செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்த முறைகேடுகளில் திரைப்படத் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, அவர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. மேலும், விக்ரம் ரவீந்திரனின் வீடு, அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். சீலை அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும், அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர்கள் மனுவில் கோரியிருந்தனர்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், எந்த அடிப்படையில் டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது, எதற்காக சோதனை நடத்தப்பட்டது என்பதற்கான காரணங்களை தாக்கல் செய்தார். அதை ஆய்வு செய்த நீதிபதிகள் “இதில் உள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை” என்றனர். மேலும், வீட்டுக்கு சீல் வைக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லாதபோது, எந்த அடிப்படையில் சீல் வைத்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அமலாக்கத் துறை தரப்பில், விக்ரம் ரவீந்திரனின் வீட்டுக்கு சீல் வைக்கப்படவில்லை என்றும், தங்களுக்கு தெரியப்படுத்தாமல் கதவை திறக்க வேண்டாம் என்று கூறி நோட்டீஸ் ஒட்டியதாகவும் தெரிவித்தனர். அதற்கு நீதிபதிகள், ” இதற்கு என்ன அர்த்தம்? தனது வீட்டுக்குள் செல்ல மனுதாரர் அமலாக்கத் துறையிடம் அனுமதி பெற்றுத்தான் செல்ல வேண்டுமா?” என்றனர்.

அப்போது அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், அந்த நோட்டீஸ் அகற்றப்படும் என்று தெரிவித்தார். அதையடுத்து நீதிபதிகள், “நோட்டீஸ் ஒட்டுவதற்குக்கூட அமலாக்கத் துறைக்கு அதிகாரம் இல்லாத நிலையில் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட ஒன்றை சட்டப்பூர்வமானதாக மாற்ற முயற்சிக்க வேண்டாம்” என்றனர்.

அப்போது ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், “2014 முதல் 2021 வரை முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி மதுபான பார் உரிமையாளர்கள், மதுபான விற்பனையாளர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் காலகட்டத்தில் ஆகாஷ் பாஸ்கரன் படித்துக் கொண்டிருந்தார்” என்றார். அதையடுத்து நீதிபதிகள், “டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் மனுதாரர்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பதற்கான ஆவணங்களை அமலாக்கத் துறை நாளை (இன்று) தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறி, விசாரணையை தள்ளிவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.