டெல்லி மதராசி காலனி அகற்றப்பட்ட போது தமிழர் குடும்பங்களுக்கு எல்லா வகையிலும் உதவிகளை தமிழ்நாடு அரசு செய்வதற்குத் தயாராக இருக்கிறது எனத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார்.
அதன்படி இந்த வாரத்தின் துவக்கத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாயை ஒதுக்கி முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி இன்று பாதிக்கப்பட்ட 370 தமிழ் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம். நாசர் மற்றும் டெல்லியின் சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் ஆகியோர் வழங்கினர்.

தமிழர்கள் தமிழ்நாட்டைக் கடந்து இந்தியா முழுவதும் பரவலாக வசித்து வருகிறார்கள். வேலை, தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகக் குடிபெயரும் மக்கள், மொழி, கலாசாரம் என்ற வகையில் ஒரே இடத்தில் கூடி வாழ்கிறார்கள்.
பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பல நகரங்களில் இப்படிக் கூட்டாகத் தமிழர்கள் வசித்து வருகிறார்கள். இதில் டெல்லியில் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிப்பதாகக் கணக்கெடுப்புகள் கூறுகின்றன.
இப்படி இருக்க தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் வசிக்கும் மதராசி காலனியானது, பாராபுல்லா மழைநீர் கால்வாயின் ஓட்டத்தைத் தடுக்கிறது. எனவே, மழைக்காலம் வருவதற்கு முன்பு அந்த ‘வடிகால் சுத்தம் செய்யப்பட வேண்டும்’ என்று வழக்குத் தொடரப்பட, அதை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றமும் மக்களை இடமாற்றம் செய்ய டெல்லி மேம்பாட்டு ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், டெல்லி மதராசி காலனியின் 370 குடும்பங்களைச் சேர்ந்த தமிழர்கள், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து டெல்லி யூனியன் பிரதேச அரசின் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திலும் ஈடுபட்டனர். பல்வேறு சட்டப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இருந்தும் எல்லா சட்டக் கதவுகளும் மூடிய பின் கடந்த ஜூன் 1-ல் தேதி மதராசி காலனி பொக்லைன் இயந்திரங்கள் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
டெல்லியில் குடிசைகள் பெருகுகின்றன அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று 2016-ம் ஆண்டு டெல்லி குடிசை மற்றும் மறுகுடியமர்வு இடமாற்றக் கொள்கை டெல்லி யூனியன் பிரதேச அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

இத்தகைய விதிமுறைகளின்படி, மறுவாழ்வு அல்லது இடமாற்றத்துக்குத் தகுதிபெற குடிசைப் பகுதிகள் ஜனவரி 1, 2006-க்கு முன்பும், குடியிருப்புப் பகுதிகள் ஜனவரி 1, 2015-க்கு முன்பும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று வரையறை செய்யப்பட்டது.
இந்தத் தேதிக்குப் பிறகு உருவாக்கப்பட்டவை இந்தக் கொள்கையின் கீழ் தகுதி பெறாது. இதற்காக இந்தப் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பரில், தகுதியான மற்றும் தகுதியற்ற குடியிருப்பாளர்களை அடையாளம் காண்பதற்காக டெல்லி அரசு, ஒரு கணக்கெடுப்பை நடத்தி, தகுதியான குடும்பங்களின் பட்டியலைத் தயாரித்தது.
அந்த வகையில், முதற்கட்டமாக மதராசி காலனியில் வசிக்கும் 370 குடும்பங்களில் 189 குடும்பங்கள் மட்டுமே, புதிதாக வீடுகள் பெறத் தகுதியுடையவை எனக் கண்டறியப்பட்டு, குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கப்பட்டன.
பின் இரண்டாவது கட்டமாக மீண்டும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 25 பேருக்கு வீடு வழங்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் வீடு வழங்கவில்லை.
அப்படி வீடு ஒதுக்கப்பட்டவர்களும், இடமாற்றத்துக்கு எதிராக போர்க்குரல் கொடுத்து வருகின்றனர். கிட்டத்தட்ட 50 கி.மீ தொலைவில் உள்ள இடத்தில் குடியமர்த்தினால், அன்றாட கூலிகளான தங்களுடைய பிழைப்பும் குழந்தைகளுடைய படிப்பும் பாதிக்கப்படும் என்பதுதான் அவர்களுடைய கவலை. அதேபோல, மீதமுள்ள 156 குடும்பங்களின் நிலையும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
மதராசி காலனியைச் சேர்ந்த தமிழர்களுக்குப் போதிய உதவிகள் செய்யப்படும் எனவும், தமிழ்நாடு திரும்ப விரும்புபவர்களுக்கு அதற்கான உதவியை தமிழ்நாடு அரசு செய்யும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியளித்திருந்தார்.

இவ்வகையில் கடந்த 16ஆம் தேதி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் நிவாரண நிதிய ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் இன்று மதராசி காலனியைச் சேர்ந்த 370 தமிழர்களின் குடும்பத்திற்கும் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் தலா ரூ.12,000 வழங்க முடிவு செய்யப்பட்டு, ரூ. 8000 அவர்களது வங்கிக் கணக்கிலும், ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்களையும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம் நாசர் மற்றும் டெல்லியின் சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் ஆகியோர் தமிழர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார்.