பெர்லின்,
மகளிர் மட்டும் பங்கேற்கும் பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது. தற்போது முதல் சுற்று போட்டிகள் நடந்து வருகிறது.
இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்), ரஷியாவின் லியுட்மிலா சாம்சோனோவா உடன் மோதினார்.
இந்த போட்டியின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக்கணக்கில் நவோமி ஒசாகா கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 2வது செட்டை 7-6 (7-3) என்ற புள்ளிக்கணக்கில் லியுட்மிலா சாம்சோனோவா கைபற்றினார்.
இதன் காரணமாக வெற்றியாளரை தீர்மானிக்கும் 3வது செட்டில் அனல் பறந்தது. இதில் அபாரமாக செயல்பட்ட லியுட்மிலா சாம்சோனோவா 6-4 என்ற புள்ளிக்கணக்கில் நவோமி ஒசாகாவுக்கு அதிர்ச்சி அளித்தார்.
இறுதியில் 3-6, 7-6 (7-3), 6-4 என்ற செட் கணக்கில் நவோமி ஒசாகாவை வீழ்த்தி லியுட்மிலா சாம்சோனோவா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி கண்ட ஒசாகா தொடரில் இருந்து வெளியேறினார்.