லீட்ஸ்,
சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டி லீட்சில் இன்று தொடங்குகிறது. தற்போது நடைபெறும் டெஸ்ட் போட்டி முந்தைய போட்டிகளை விட சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஏனெனில் அனுபம் வாய்ந்த வீரர்கள் இல்லாத இளம்படை கொண்ட இந்திய வீரர்கள் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறார்கள். இந்நிலையில், இந்த தொடர் குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் சில கருத்துகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது,
இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஆர்.அஸ்வின் ஆகியோர் இல்லாதது குறித்து நிறைய விவாதித்து விட்டோம். இந்த மூன்று அனுபவ வீரர்கள் இல்லாதால் இந்திய அணியை எளிதாக வீழ்த்தி விட முடியும் என்று நாங்கள் நினைக்கமாட்டோம். அவர்களது இடத்தை நிரப்பக்கூடிய அளவுக்கு இந்தியாவில் நிறைய திறமையான வீரர்கள் இருக்கிறார்கள்.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் திறமையையும், அவர் அணிக்குள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர் என்பதையும் நாங்கள் அறிவோம். ஆனால் அவரது பந்து வீச்சை கண்டு அச்சப்படுகிறீர்களா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை.
போட்டியிலோ அல்லது தொடரிலோ ஒரு பவுலரால் வெற்றி தேடித்தர முடியாது. 11 வீரர்களும் கைகொடுத்தாக வேண்டும். அதனால் பும்ரா மீது மட்டுமே எங்களது முழு கவனமும் இருக்காது. பும்ரா மட்டுமல்ல, இந்திய அணியில் உள்ள மற்ற பவுலர்களும் மிரட்டக்கூடியவர்கள் தான். இவ்வாறு அவர் கூறினார்.