இஸ்ரேல் – ஈரான் போர்: ட்ரம்ப்பின் ‘கணிக்க முடியாத போக்கு’ அமெரிக்காவுக்கு சாதகமா, பாதகமா?

“நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது; ஆனா, வரவேண்டிய நேரத்தில் சரியாக வருவேன்” என்பன போன்ற பஞ்ச் வசனங்களை சினிமாவில் வேண்டுமானால் ரசிக்கலாம். ஆனால், “அதை நான் செய்யலாம். செய்யாமலும் போகலாம். நான் என்ன செய்வேன் என்று யாருக்கும் தெரியாது” என்று ஈரான் பிரச்சினையில் அமெரிக்க அதிபர் கூறியிருப்பது ரசிக்கக் கூடிய வசனமும் அல்ல, ஏற்கக் கூடிய வாதமும் அல்ல. ஈரான் பிரச்சினையில் ட்ரம்ப்பின் கணிக்க முடியாத இந்தப் போக்கு அமெரிக்காவுக்கு சாதகமா, பாதகமா என்பதைப் பற்றி சுருக்கமாக அலசுவோம்.

சக்திவாய்ந்த அணு குண்டுகளை தயாரிக்க ஈரான் தீவிர முயற்சி செய்து வருவதாக மேற்கத்திய நாடுகள் நீண்ட நாட்களாக குற்றம்சாட்டி வருகின்றன. தற்போது 87 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஈரான் வைத்திருக்கிறது என்றும், இதை 90 சதவீதம் செறிவூட்டினால் அணுகுண்டுகளை தயாரிக்க முடியும் என்றும் வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப் படை கடந்த 13-ம் தேதி திடீர் தாக்குதலை நடத்தியது. அதையடுத்து, ஈரான் பதிலடி கொடுக்கத் தொடங்கியது. கடந்த 8 நாட்களாக இஸ்ரேல் – ஈரான் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் 20 அணுசக்தி தளங்கள் மிகக் கடுமையாக சேதமடைந்து உள்ளன. மேலும், ஈரானின் 14 அணுசக்தி விஞ்ஞானிகளும் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் 8-வது நாளை எட்டியுள்ளது. இரு தரப்பும் நாளுக்குநாள் தாக்குதலின் வீரியத்தை அதிகரித்துக் கொண்டே செல்லும் சூழலில், இந்தப் போரில் அமெரிக்கா நேரடியா தலையிடுமா என்பது உண்மையிலேயே மில்லியன் டாலர் கேள்வியாகியுள்ளது. கூடவே, ட்ரம்ப்பின் இந்தப் போக்கு உலக அளவில் ஊடக விவாதப் பொருளாகியுள்ளது. ஒருபக்கம் பிரச்சினை வலுக்கிறது, மறுபக்கம் அதேபோல் ட்ரம்ப் முடிவின் மீதான எதிர்பார்ப்பும் எகிறிக் கொண்டிருக்கிறது. இத்தகைய போக்கைத்தான் ட்ரம்ப் விரும்புகிறாரோ என்ற சந்தேகமும் எழுகிறது.

ஆற அமர எடுக்கப்பட வேண்டிய முடிவா? – ட்ரம்ப் தனது வெளியுறவுக் கொள்கைகளை மற்றவர்கள் எளிதில் கணிக்க முடியாத அளவுக்கு வைத்திருப்பது, இது என்னவோ முதன்முறை இல்லைதான் என்றாலும், ஈரான் – இஸ்ரேல் மோதல் தடிக்கும் வேகத்தைப் பார்க்கும்போது வழக்கமான சித்து விளையாட்டுகளை விளையாடுவதற்கான நேரம் இதுவல்ல என்பதை மட்டும் ஆணித்தரமாக சொல்ல முடியும்.

ட்ரம்ப்பின் நகர்வுகளை நாம் நிறைய விதத்தில் அணுகலாம். ஒருவேளை, ட்ரம்ப் இப்போது நேரடியாக களத்தில் இறங்கி மோதாமல், பந்தைத் தடுத்து ஆடும் ஆட்டத்தை ஆடுகிறாரோ என்ற யோசனையும் எழாமல் இல்லை. ஈரான் தனது அணுசக்திக் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும் என்ற அழுத்தத்தை அமெரிக்கா கொடுத்து, ‘மாற்றுங்கள்… இல்லாவிட்டால் வருந்துங்கள்’ என்ற நிலைப்பாட்டைக் கையில் எடுக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியென்றால், அது தவறான அணுகுமுறையாகத் தான் இருக்கக்கூடும் என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

ஈரான் அணுசக்தி பலத்தைத் தடுக்க நினைத்தால், ஈரானுக்கு அந்த விஷயத்தில் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்பதை அமெரிக்கா தெளிவாக எடுத்துரைக்க வேண்டுமல்லவா? ஃபர்டோ யுரேனியம் செறிவூட்டும் மையத்தைத் தாக்குவது அமெரிக்காவின் திட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தாலும்கூட மற்ற முடிவுகள் பற்றி எதுவும் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லையே!

போர் நிறுத்தத்தைவிட மேலானது என்றால்? – ஈரான் – இஸ்ரேல் பிரச்சினையில் போர் நிறுத்ததைவிட மேலானதாக ஒன்று வேண்டும் என்று ட்ரம்ப் கூறுகிறார். அதற்கு என்ன அர்த்தம்? ஃபர்டோவை அழிப்பதா? அமெரிக்கப் படைகளை ஈரானில் இறக்குவதா? ஆட்சி மாற்றமா?. இதில் எதை விரும்புகிறார் என்பதை இதுவரை வெளிப்படையாக ட்ரம்ப் தெரிவிக்கவில்லை.

ட்ரம்ப்பின் தெளிவற்ற இந்தப் போக்கு, இருவிதமான புரிதலுக்கான வாய்ப்புகளை ஈரானுக்கு கொடுக்கும். ஒன்று, உங்கள் நடவடிக்கையின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று ஈரானை குழப்பலாம். இல்லாவிட்டால், தங்கள் விவகாரத்தில் அமெரிக்கா தீவிரமாக இல்லை என்று ஈரான் நினைத்துக் கொள்ளும்.

ட்ரம்ப் தான் என்ன செய்கிறோம் என்பதை யாரும் தெரிந்துகொள்ளக் கூடாது என்பதில் எப்போதுமே தெளிவாகத்தான் இருக்கிறார். அதுவே அவரது ஹால்மார்க் அடையாளமாக இருக்கிறது. இந்தப் போக்கு எதிரியை பதற்றத்தில் வைக்கும், அதில் நாம் ஆதாயம் தேடலாம் என்பது ட்ரம்ப்பின் கணக்காக இருக்கலாம். ஈரானைப் பொறுத்தவரை இத்தகைய போக்கை ட்ரம்ப் கடைப்பிடிப்பது இது முதன்முறை அல்ல.

கடந்த 2018-ல் ஈரானின் அணுசக்தி நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும் வகையில் பிரிட்டன், சீனா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் பிரதேசங்கள் இணைந்த உருவாக்கிய விரிவான செயல் திட்டத்தை உருவாக்குவதற்கான கூட்டமைப்பில் இருந்து வெளியேறி அதிர்ச்சியைக் கடத்தினார் ட்ரம்ப். இது ஈரானுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவின் கூட்டாளிகளுக்கே குழப்பத்தை ஏற்படுத்தியது.

வேலை செய்யுமா இந்த உத்தி? – இப்படி யாரும் ஊகிக்க முடியாதபடி வெளியுறவுக் கொள்கையை வைத்திருப்பது அபாயகரமானது என்று எச்சரிக்கின்றனர் சர்வதேச நிபுணர்கள். புவி அரசியலில் நிலையான கொள்கையைக் கொண்டிருப்பதையே எல்லா உலக நாடுகளும் விரும்பும், ஆனால் ட்ரம்ப் அப்படியான கொள்கைக்கு விதிவிலக்காக இருக்கிறார். இதுபோன்ற நிலையற்ற போக்கு, மோதல் நேரத்தில் இன்னும் மோசமானது. இது பற்றி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் போக்கு. ட்ரம்ப் நினைப்பது போல், அவரின் போக்கால் ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பது மெய்ப்படலாம் அல்லது பொய்யாகிப் போகலாம்.

அமெரிக்காவிலேயே 14 சதவீதம் பேர் தான் ஈரான் பிரச்சினையில் அமெரிக்காவின் ராணுவ தலையீட்டை ஆதரிக்கின்றனர். ஒருவேளை, ட்ரம்ப் தங்கள் நாட்டை நேரடியாக மிரட்டுகிறார் என்று ஈரான் உணர்ந்தால், அது அவர்கள் அணுசக்தி கொள்கையை மாற்றுவதை ஊக்குவிப்பதைக் காட்டிலும், அமைதி காக்கவே ஊக்குவிக்கும்.

ஈரானின் எச்சரிக்கை: ட்ரம்ப் தனது முடிவை வெளிப்படையாகத் தெரிவிக்காவிட்டாலும் கூட, அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்கலாம் என கமேனி எச்சரித்தது நினைவுகூரத்தக்கது.

தனது தெளிவற்ற போக்கினால், ஈரானுக்கும் அப்பாற்பட்டு வெளியுறவுக் கொள்கையை பணயம் வைக்கிறார் ட்ரம்ப். அணு ஆயுதம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இன்னொரு நாடு இணைந்துவிடக் கூடாது என்ற அமெரிக்காவின் எண்ணம் வரவேற்கத்தக்கது என்றாலும் கூட, இதற்காகவே ஒரு நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்துவது என்பது ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரில்’ பின்னடைவாகும்.

‘தனக்குத் தானே ஆப்படித்துக் கொள்வது’ – ஈராக்கில் அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா நடத்திய தாக்குதல் இன்னும் உலக அரங்கில் பல்வேறு கேள்விகளை எழுப்பும் நிலையில், ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முடியுமா என்பதை சர்வதேச அணுசக்தி முகமை சந்தேகம் எழுப்பும் நிலையில், அமெரிக்காவின் இந்தப் போக்கு எந்த விதத்திலும் ஏற்கத்தக்கது அல்ல என்பதே நிபுணர்களின் பார்வையாக இருக்கிறது.

அமெரிக்க அரசியலிலும் கூட ட்ரம்ப் மீது சக அரசியல்வாதிகள் அதிருப்தியைத் தான் காட்டுவர். வெளியுறவுக் கொள்கையில் நிலையற்ற தன்மை கொண்டிருக்கும் ட்ரம்ப் மீது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இழக்கக் கூடும். இது ட்ரம்ப் என்ன முடிவு எடுத்தாலும், அதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.

ஈரான் பிரச்சினையில் ட்ரம்ப்பின் கணிக்க முடியாத போக்கு எத்தகையது என்றால், தனக்குத் தானே ஆப்படித்துக் கொள்வது போன்றதே என்று சொல்லலாம் என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள். இதை உறுதி செய்யும் விதமாகவே, இஸ்ரேல் – ஈரான் போரில் அமெரிக்கா ஈடுபடுவது குறித்து இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அதிபர் ட்ரம்ப் முடிவெடுப்பார் என வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

அதேவேளையில், இஸ்ரேலும் ஈரானும் போரைத் தீவிரப்படுத்தி வருகின்றன. ஒருபக்கம் இஸ்ரேல் தாக்குதலால் ஈரானில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதாக செய்திகள் வரும் வேளையில், மறுபக்கம் ஈரான் தாக்குதலில் இஸ்ரேலின் முக்கிய இடங்களும், கட்டிடங்களும் உருக்குலைந்து போயுள்ள புகைப்படங்களும் வீடியோ பதிவுகளும் வெளியாகி வருவதும் கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.