சாதிக்கும் முனைப்பில் களமிறங்கும் இளம்படை: இந்தியா-இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

லீட்ஸ்,

இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து டெஸ்ட் தொடர்கள் கொண்ட போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி அந்நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. தற்போது நடைபெறும் டெஸ்ட் போட்டி முந்தைய போட்டிகளை விட சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அனுபம் வாய்ந்த வீரர்கள் இல்லாத இளம்படை கொண்ட இந்திய வீரர்கள் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள இருக்கிறார்கள்.

இதன்படி இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் இன்று மாலை 3.30 மணிக்கு (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் கடந்த ஒரு வாரமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா ஆகிய இரு நட்சத்திர வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு பெற்றுள்ளதால் போதிய அனுபவமில்லாத ஒரு அணியாக இந்தியா அங்கு சென்றுள்ளது. 25 வயதான சுப்மன் கில் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். ‘இளங்கன்று பயமறியாது’ என்பது போல் இந்திய இளம் வீரர்களுக்கு தங்கள் பெயரை நிலைநாட்டுவதற்கு அருமையான வாய்ப்பு கிட்டியுள்ளது.

தொடக்க வீரராக ஜெய்வாலுடன், லோகேஷ் ராகுல் இணைந்து களம் இறங்குகிறார். 3-வது வரிசையில் 8 ஆண்டுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ள கருண் நாயர் ஆடுவார் என்று தெரிகிறது. விராட் கோலி ஓய்வால் காலியான 4-வது வரிசையில் கேப்டன் சுப்மன் கில் கால்பதிக்கிறார். தமிழகத்தை சேர்ந்த பேட்ஸ்மேன் சாய் சுதர்சன், ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரின் பெயரும் பரிசீலனையில் உள்ளது.

பந்து வீச்சில் சாதிப்பாரா பும்ரா

இங்கிலாந்தில் திடீரென வானிலை மாறும். மேகமூட்டமான சீதோஷ்ண நிலை வந்து விட்டால் உடனே பந்து காற்றில் திரும்பி தாறுமாறாக ‘ஸ்விங்’ ஆகும். அதன் பிறகு பேட்ஸ்மேன்கள் தாக்குப்பிடிப்பது கடினமாகி விடும். அங்கு விளையாடிய அனுபவசாலி வீரர்கள் அனைவரும் சொல்லும் ஒரே யோசனை, சூழலுக்கு தகுந்தபடி வீரர்கள் தங்களை மாற்றிக்கொண்டு பக்குவமாக விளையாட வேண்டும் என்பது தான்.

பந்து வீச்சில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவைத் தான் இந்தியா மலை போல் நம்பி இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக 60 விக்கெட்டுகளை (14 டெஸ்ட்) அறுவடை செய்திருக்கும் பும்ரா, இங்கும் மிரட்டினால் இந்தியாவின் கை ஓங்கும் என்பதில் சந்தேகமில்லை. அவருக்கு முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா அல்லது ஆகாஷ் தீப் ஆகியோர் உறுதுணையாக இருப்பார்கள். வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் இடத்துக்கு நிதிஷ்குமார் ரெட்டி, ஷர்துல் தாக்குர் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும்.

இந்திய அணி 2007-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை ருசித்தது கிடையாது. அதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றால் முதல் டெஸ்டிலேயே ஜெயிக்க வேண்டியது அவசியமாகும்.

இங்கிலாந்து அணி

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி உள்ளூரில் எப்போதும் வலுவானது. ஜோ ரூட், ஆலி போப், டக்கெட், ஹாரி புரூக் உள்ளிட்டோர் பேட்டிங்கிலும், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், டாங்கு ஆகியோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.

இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் 10 சதங்கள் நொறுக்கியுள்ள ஜோரூட் இன்னும் இரு சதம் எடுத்தால், இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார். ஆக்ரோஷமாக ஆடக்கூடிய இங்கிலாந்து பேட்டர்கள் இந்த டெஸ்டிலும் அதே யுக்தியை கையில் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக ஆடிய ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் இங்கிலாந்தின் டாப்-3 பேட்ஸ்மேன்களான கிராவ்லி, பென் டக்கெட், துணை கேப்டன் போப் 3 பேரும் சதம் அடித்து அசத்தினர். இவர்களின் ஆதிக்கத்திற்கு அணைபோடுவது இந்திய பவுலர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும்.

லீட்ஸ் ஆடுகளம்

போட்டி நடக்கும் லீட்ஸ் ஆடுகளம் தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும். போக போக பேட்டிங்குக்கு சாதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. லீட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இதற்கு முன்பு 7 டெஸ்டுகளில் விளையாடி உள்ளது. அதில் 2-ல் வெற்றியும் (1986 மற்றும் 2002-ம் ஆண்டு), 4-ல் தோல்வியும், ஒன்றில் டிராவும் கண்டுள்ளது. இந்திய அணி அதிகபட்சமாக 2002-ம் ஆண்டில் 8 விக்கெட்டுக்கு 628 ரன்கள் குவித்துள்ளது.

இங்கிலாந்து அணி இங்கு 80 டெஸ்டுகளில் ஆடி 37-ல் வெற்றியும், 25-ல் தோல்வியும், 18-ல் டிராவும் சந்தித்துள்ளது. இதில் கடைசி 5 டெஸ்டில் தொடர்ச்சியாக வென்றதும் அடங்கும். இது 4-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்ட தொடர் என்பதால் அந்த வகையிலும் இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. அதனால் இரு அணியினரும் வெற்றியோடு தொடங்க ஆர்வம் காட்டுவார்கள் என்று தெரிகிறது.

போட்டிக்கான இரு அணி வீரர்கள்:-

இந்தியா: லோகேஷ் ராகுல், ஜெய்ஸ்வால், கருண் நாயர், சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட், சாய் சுதர்சன் அல்லது வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, நிதிஷ்குமார் ரெட்டி அல்லது ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா அல்லது ஆகாஷ் தீப்.

இங்கிலாந்து: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜாமி சுமித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டாங்கு, சோயிப் பஷீர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.